Saturday, February 28, 2009

Demonstration in Milton Kings - UK .27/02/2009

விடுதலைப் புலிகள் அளித்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி போரை நிறுத்த வேண்டும்: சிறிலங்கா அரசுக்கு பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009]
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது.
இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், அங்கு உணவு, குடிநீர், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
போரில் அப்பாவித் தமிழர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதுடில்லியில் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ஆயிரம் உயர்வலு கொண்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றும் போதும் இதே கருத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.
இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இலங்கையில் சண்டை நிறுத்தம் செய்ய தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருக்கிறது. ஆயுதங்களைக் கீழே போடுவோம் என்பதை விட இது சிறிய அறிவிப்புதான்.
எனினும் இலங்கையில் போரை நிறுத்துவதற்காக விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாகும்.
எனவே, இலங்கையில் போரை நிறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சிக்கு விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.
போர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட உதவிகளை வழங்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
வடக்கு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை வழங்க மருத்துவர்கள், மருந்துப் பொருட்கள் அடங்கிய குழுவை இந்தியா விரைவில் அனுப்பி வைக்கும். போர் நிறுத்தத்திற்குப் பிறகு தமிழ் மக்கள் வாழும் மாநிலங்களுக்கு சமத்துவம், அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி நான் விடுத்துள்ள இந்தத் தாழ்மையான வேண்டுகோளை சிறிலங்கா அரசும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு அதிகளவான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் - ஜோன் ஹோம்ஸ்

[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009]
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களின் 60 வயதுக்கு கீழ்ப்பட்டோர் சுதந்திரமாக நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பபட்டுள்ளதாக ஐ.நா.மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கைக்கான விஜயத்தின் அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள அவல நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்கள் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தமிழ் தரப்புகளும் வன்னியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன. தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அங்கு செயற்படாமை காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறமுடியவில்லை. எனினும் நாள் ஒன்றுக்கு அதிகளவான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர், பலர் காயமடைகின்றனர். எவ்வாறாயினும் யுத்தத்தினால் அதிகம் பொதுமக்களே பாதிக்கப்படுவதாக தாம் நம்புவதாக ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் இருந்து வெளியேறுவோரை கண்காணிப்பதற்காக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினரை அனுமதிப்பது என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மேலும் 400 ஏக்கர் நிலத்தில் தற்காலிக இருப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது 25 ஏக்கர் நிலப்பரப்பிலேயே 25 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோம்ஸ் குறிப்பிட்டார் தமது விஜயத்தின் போது அரசாங்க தரப்பு ஜனாதிபதி மற்றும் முக்கியமான தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரையும், இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் “தமிழர் விழிப்பு இயக்கம்” அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009] இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது..உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது. எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழினம் என்றுமில்லாதவாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனப் படுகொலையை எதிர்த்தும், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்தும் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்த ஊடகங்களிற்கு இருக்கின்றது. ஆனால் சில ஊடகங்கள் இந்தக் கடமையை மறந்ததும் அன்றி, எமது மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டும் வருகின்றன. சில ஊடகங்கள் எமக்கு ஆதரவு போன்று காட்டிக் கொண்டு, மறைமுகமாக தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. எமது மக்கள் படும் இன்னல்களையும, போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தும், எமக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், களியாட்ட நிகழ்வுகளை வழங்கி மக்களை திசைதிருப்பியும் வருகின்ற ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. எமது மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தக் கூடிய, தமிழீழ மக்களிற்கு ஆதரவு திரட்டக் கூடிய வலுவும் வசதியும் இருந்தும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றன இதற்கு மாறான வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஈழத்தில் நடக்கின்ற அவலங்களை மட்டும் அன்றி, தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுகின்ற செய்திகளைக் கூட இந்தத் தொலைக்காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. அண்மையில் ஈழத் தமிழர்களுக்காக திரு தொல் திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது, அது பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்தன. எமக்காக தன்னை நெருப்புக்கு இரையாக்கி தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமாரன் பற்றிய செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக தர்மத்தையே காலில் போட்டு மிதித்தன. மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி நிகழ்விற்கு மக்கள் தன்னெழுச்சியோடு இலட்சக் கணக்கில் திரண்டனர். அரசியல்வாதிகளின் பிறந்த நாள் விழாக்களை முக்கியத்துவம் கொடுத்து செய்தி சொல்லும் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லை. அத்தோடு சிங்கள இனவாதத்தோடு கைகோர்த்து நின்று இன அழிப்பில் நேரடியாகப் பங்கெடுத்து வரும் காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழின விரோதிகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று சித்தரிக்கும் கைங்கரியத்தை எந்த வகையிலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. எமக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்தும், சிங்கள இனவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்களுக்கு வக்காளத்து வாங்கியும் வருகின்ற இந்த தொலைக்காட்சிகளை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இந்த தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிப்போம் அன்பார்ந்த தமிழ் மக்களே! ஈழத்தில் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி, சிங்களத்தின் கோர வெறியாட்டத்திற்குள் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலும் எமக்காக பல துன்பங்களுக்கு மத்தியில் பலர் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பல இளைஞர்கள் தம்மை தீக்கு அர்பணித்து விட்டு நிற்கின்ற இந்த வேளையில், இரண்டு தொலைக்காட்சிகளை தியாகம் செய்வது எமக்கு ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆகவே எவ்வித தயக்கமும் இன்றி இந்தத் தொலைக்காட்சிகளை முற்றாகப் புறக்கணியுங்கள்! அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பல பங்களிப்புகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தமிழினத்திற்கு எதிராக செயற்படும் இந்தத் தொலைக்காட்சிகளை புறக்கணிக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் வர்த்தக நிறுவனங்களில் இந்தத் தொலைக்காட்சிகளுக்கான அட்டைகளை விற்பதை நிறுத்துங்கள்! நீங்கள் மனது வைத்தால் எமது புறக்கணிப்புப் போராட்டம் விரைவில் வெற்றியடைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்! சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இரண்டையும் புறக்கணிப்பதோடு, சன் தொலைக்காட்சி தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கும் முடிவை நாம் எடுத்துள்ளோம். அந்த வகையில் சன் தொலைக்காட்சி தயாரிப்பில் வெளிவரும் படங்களை புலம்பெயர் நாடுகளில் இனிமேல் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, எதிரியின் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் வண்ணம் நாம் விடுத்திருக்கும் இந்த போராட்ட அழைப்பை ஏற்று விரைந்து செயற்படும்படி அனைத்துத் தமிழ் மக்களையும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம். „வலிமையே வாழ்வு“ ஒற்றுமையே வலிமை“ -தமிழர் விழிப்பு இயக்கம்- ----------இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது---------

இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காத பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புக்கொடி: வைகோ உட்பட 185 பேர் கைது

[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009] இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தூத்துக்குடியில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 185 பேரை காவல்துறையினர் இன்று செய்துள்ளனர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் தூத்துக்குடியில் ஆயிரம் உயர்வலு கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு இன்று சனிக்கிழமை அடிக்கல் நாட்ட வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை திரும்பிப் போக வலியுறுத்தி இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று காலையில் வைகோ தலைமையில் கூடினர். கறுப்புக்கொடியுடன் வந்திருந்த அவர்கள் விழா நடைபெறும் ஏ.பி.சி. மகளிர் கல்லூரி விளையாட்டுத் திடலுக்கு ஊர்வலமாகப் புறப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் வழியில் மடக்கி கைது செய்தனர். ஊர்வலம் புறப்படும் முன்னர் வைகோ உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொலை செய்கின்ற சிறிலங்கா அரசுக்கு பிரணாப் முகர்ஜி, வீரம் செறிந்த தூத்துக்குடி மண்ணில் எப்படி கால் வைக்கலாம், தமிழர்களை அதிகளவில் கொண்டிருந்த மாவீரர் நேதாஜி பிறந்த வங்க மண்ணில் இருந்து வந்துள்ள பிரணாப் முகர்ஜி குருதிக்கரையுடன் தூத்துக்குடிக்கு வருவது என்ன நியாயம் என்றார். எந்தப் பெரிய சிக்கல் என்றாலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்கும் மத்திய அரசும், மாநில அரசும் இலங்கைத் தமிழர் சிக்கலில் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழீழநேயன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் செந்தமிழ்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஞானதாஸ், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராசன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு உள்ளிட்ட 185-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இப்பேரணியை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி 2 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம்

[சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009] இலங்கையில் தற்போது தோன்றியுள்ள மனித அவலங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இலங்கை தொடர்பான விவாதங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை தலைவர் யூகியோ ரகாசோ கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐந்து நிரந்தர உறுப்புரிமை உள்ள நாடுகளில் ஒரு நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது குறித்து கடந்த புதன்கிழமையே உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையில் சேர்க்கப்பட்டது இலகுவான காரியம் அல்ல. சிறிலங்கா அரசுடனும் இது குறித்து தொடர்பு கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு அறிவித்தலும் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலை குறித்தான விவாதம் 'ஏனைய விவாதங்கள்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடல் - எங்கெங்கும் எம் பொங்கு தமிழ்மழை..

Friday, February 27, 2009

தே.மு.தி.க வள்ளிப்பட்டு கிராமத்தின் கிளை செயலாளர் தீக்குளித்துள்ளார்

[வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009] சென்னை வேலூர் மாவட்டம், வானிணம்பாடியை அடுமுத்த வள்ளிப்பட்டு கிராமத்தின் தே.மு.தி.க கிளை செயலாளர் சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை இரவு 10.50 மணியளவில் தேமுதிக பிரமுகர் 36 அகவையுடைய சீனிவாசன் என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்றிக் கொண்டார். 80 சதவீதம் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிறுவயது முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது, வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளராக உள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள், இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும், எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும், எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக்கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை விஜயகாந்திடம் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

இலங்கை வான்படையின் விமானம் வன்னியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009] இலங்கை வான்படையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தலும் வெளியிடவில்லை. முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

[வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009]
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் மாணவி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 23 அகவையுடைய தனபாலசிங்கம் நிருஷா என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பெண்கள் விடுதியில் சக மாணவிகளுடன் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அதிகாலை இடையில் தூக்கத்திலிருந்து எழுந்து வெளியில் சென்ற மாணவி மீண்டும் படுக்கை அறைக்கு திரும்பவரவில்லை. பின்னர் தேடுதல் நடாத்திய போது கழுத்தில் துப்பட்டாவினால் சுற்றியபடி மின்விசிறியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டள்ளார். சடலத்திற்கு அருகிலிருந்து கடிதம் ஒன்றும் மீட்க்கப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது. அதில் தன்னுடைய அப்பா, அம்மாவுடன் கடந்த 6மாதங்களாக எவ்வித தொடர்வுமில்லை, என்னால் தனியாக வாழ முடியாது எனவும், என்னை பார்ப்பதற்கு யாரும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் பிரியா எனும் மாணவி இவ்வாறு மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நிருஷாவின் சடலம் நீதிவான் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரேத பரிசோதனையின் பின்னர் வவுனியாவில் உள்ள அவரின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவரின் கொலையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் உரிய விசாரணை நடவாத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கடந்த 23ம் திகதி பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் மாரிமுத்து பிறேமலதா இவ்வாறு மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார் எனினும் அதனை தற்கொலை என பல்கலைக்கழ நிர்வாகம் மூடிமறைத்த நிலையில் மீண்டும் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டள்ளதாகவம் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் கடும் சமர் - இராணுவத்திற்கு பேரிழப்பு

[வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009] புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் சிறீலங்காவின் நடவடிக்கை பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சுமார் 1500 வரையான படையினர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற சண்டையில் மேலும் நூற்றுக் கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன், சுமார் 15 கிலோ மீற்றர் படையினர் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து செய்திகள் எவையும் வெளிவரவில்லை. இதுவேளை, முழுமையான போர் செய்திகள் தணிக்கையில் உள்ள நிலையில் சிறிலங்கா தரப்பில் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை. எனினும் உலங்குவானூர்திகள் களமுனைகளில் அவசரமாக இறங்கி ஏறுவதாகவும், கொழும்பில் அவசர வாகனங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவருகின்றது. இதேவேளை, இன்றைய தாக்குதலின் போது சிறிலங்கா வான் படையின் கிபிர் விமானம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 26, 2009

பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரனை கடத்தவில்லை கைது செய்துள்ளோம்: சிறிலங்கா காவல்துறை அறிவிப்பு

[வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2009] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதல் நடவடிக்கைளுடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கொழும்பில் இருந்து வெளியாகும் 'சுடரொளி' மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனை கைது செய்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் உள்ள 'மகிந்த' மலர்ச்சாலையில் நடைபெற்ற அவரது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொண்டிருந்த வித்தியாதரன் மூன்று வெள்ளை வான்களில் சென்ற ஆயுததாரிகளால் பலாத்காரமாக கடத்தப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் கடத்தப்படவில்லை என்றும் விசாரணை செய்வதற்காகவே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கல்கிசையில் கைது செய்ததாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவிக்கின்றார். ஆனால், மரணச்சடங்கில் கலந்து கொண்ட வித்தியாதரனை ஆயுதம் தரித்த குழுவினர் பலாத்காரமாக இழுத்து வெள்ளை வானில் ஏற்றியதாகவும் அவ்வேளை, வித்தியாதரன் சத்தமிட்டார் என்றும் மரணச்சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களில் பலரும் இதனைத் தடுக்க முயற்சித்த போது ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுததாரிகளில் சிலர் சீருடையில் காணப்பட்டனர் என்றும் நேரில் கண்டவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளதாகவே கல்கிசை, வெள்ளவத்தை காவல்நிலையங்களிலும் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வித்தியாதரன் கடத்தப்பட்டதாகவே உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிறுவனத்தினரால் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. ஊடக அமைப்புக்களும் அவ்வாறுதான் தகவல் கொடுத்திருந்தன. இன்று வியாழக்கிழமை காலை 9:45 நிமிடத்தில் அவர் கடத்தப்பட்டிருந்தார். சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் கடத்தப்பட்ட வித்தியாதரனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் காவல்துறை ஊடக பேச்சாளர் றஞ்சித் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வித்தியாதரன் கடத்தப்படவில்லை என்றும் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளமையானது ஊடகவியலாளர் மத்தியில் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக சந்தேகம் இருந்திருக்குமானால் வித்தியாதரனின் வீட்டுக்கு அல்லது அவரது அலுவலகத்திற்கு குற்றப்புலனாய்வு காவல்துறையினர் சென்று விசாரனை நடத்தியிருக்கலாம் அல்லது விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கலாம். எதற்காக உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் வெள்ளை வானில் கடத்த வேண்டும் என்று ஊடக அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன. வித்தியாதரன் கடத்தப்படவில்லை அவர் கைது செய்யப்பட்டார் என்று தற்போது எதற்காக காவல்துறையினர் கதையை மாற்றுகின்றனர் எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'சுடரொளி' பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக கடந்த வாரம் வித்தியாதரன் குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் கொலைவெறித் தாக்குதல்: 22 தமிழர்கள் படுகொலை; 41 பேர் காயம்

[புதன்கிழமை, 25 பெப்ரவரி 2009] வன்னியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இன்றும் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் தானே அறிவித்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் காலை 10:00 மணிவரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். உ.மகேஸ்வரி (வயது 45) யோ.வனிதா (வயது 21) ச.தர்மலிங்கம் (வயது 68) இ.வாகினி (வயது 26) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை. யோ.இந்திராணி (வயது 41) த.யோகராசா (வயது 41) இ.ரவீந்திரகுமார் (வயது 39) வ.ராதிகா (வயது 40) உ.அனுராஜ் (வயது 18) த.சரஸ்வதி (வயது 57) இ.வரன் (வயது 11) இ.நளினி (வயது 16) பா.டினேஸ் (வயது 14) க.அமிர்தலிங்கம் (வயது 52) பொ.புண்ணியமூர்த்தி (வயது 38) க.யேந்தபத்மினி(வயது 54) க.ஆனந்தன் (வயது 34) ஆ.யுவனேஸ் நிரோசன் (வயது 26) சி.புலேந்திரன் (வயது 21) சு.புஸ்பானந்தன் (வயது 33) ஆ.குகனேசன் (வயது 27) பாலேந்திரன் (வயது 26) புவனேஸ்வரி (வயது 21) ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

Wednesday, February 25, 2009

30 families wiped out in massive attack. part 2

30 families wiped out in massive attack. part 1

Wednesday, February 18, 2009

சிறிலங்கா போர்க் கைதிகளின் சீர்திருத்தப்பள்ளி மற்றும் பராமரிப்பு இல்லங்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 21 பேர் பலி; 71 பேர் காயம்

[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009,] சிறிலங்கா படை போர்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி, மூதாளர் நலன் பேணலகம் உள்ளிட்ட சிறார் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 21-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் கடற்படையினர், தரைப்படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது இன்று புதன்கிழமை சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த சீர்திருத்தப் பள்ளியினை அடிக்கடி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு வருவது உண்டு. இதேவேளை, மூதாளர் நலன் பேணலகம், பெண்கள் உளவளப் பராமரிப்பு நிலையமான "வெற்றிமனை" தாய்-சேய் பராமரிப்பு நிலையமான "மலர்ச்சோலை", "செந்தளிர்" சிறுவர் இல்லம், பாதிக்கப்பட்ட பெண்கள் பராமரிக்கப்படும் "மேரி" இல்லம், பாதிக்கப்பட்ட பெண்கள் பராமரிக்கப்படும் "நிறைமதி" இல்லம், "அன்புமனை" தாய்-சேய் இல்லம் "குருகுலம்" சிறுவர் இல்லம் என்பனவற்றின் மீதும் இன்று பிற்பகல் 12:30 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் எஃப்-07 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தால் பார்வையிடப்படும் இடங்களில் பராமரிப்பு இல்லங்களும் அடங்கும். அத்துடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் இதன் புவி நிலையிடத் தகவல் இருக்கின்றது. இதனை, அவர்கள் ஏற்கனவே தாக்குதல் தவிர்க்கப்பட வேண்டிய இடம் என சிறிலங்கா படைத்தரப்புக்கு கொடுத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இங்கு போர்க் கைதிகளாக சிறிலங்கா கடற்படையினரும் தரைப்படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஏனைய நிறுவனங்கள் அனைத்துலக நாடுகளின் உதவிகளுடன் இயங்கிய தொண்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் புதன் அதிகாலை சிறிலங்கா கோரத் தாக்குதல்: 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் தூக்கத்திலேயே கொத்துக் குண்டுகளுக்கு பலி; 223 காயம்

[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009]
வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.
"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.
தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.
அப்பகுதியில் இருந்து மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை வேளை இருளில் நடைபெற்ற தாக்குதல் என்பதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து - அவலப்பட்டு - நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மேலதிக தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு கண்டனம்: வழக்கறிஞர்களின் உண்ணாநிலை போராட்டத்தினால் உயர்நீதிமன்ற விசாரணை பாதிப்பு

[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009] ஈழத்தில் இனப் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் சென்னை உயர்நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இலங்கை இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த மாதம் முதல் நாள்தோறும் ஒரு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமூக நீதி வழக்கறிஞர்கள் பேரவையின் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பாலு தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின்போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்களையும், வட இந்திய தொலைக்காட்சிகளையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் "தினமலர்" நாளிதழை வழக்கறிஞர்கள் தீயிட்டு எரித்தனர். மேலும், இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களைச் சிங்கள படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த நிழற்படங்களும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்தன.

தமிழினப் படுகொலையைக் கண்டித்து கறுப்புத் துணி கட்டி போராட்டம்: மாணவர்கள் கூட்டமைப்பு

[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நாளை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நுழைவாயில் முன்பாக கறுப்புத் துணி கட்டி முழக்க போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் திருமலை, தமிழக மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் செஞ்சி ரவி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசன் உட்பட பல்வேறு மாணவர் அமைப்பின் பேராளர்கள் இதனைத் தெரிவித்தனர். இலங்கையில் சிங்கள இனவெறிப் சிங்களப் படை தமிழினப் படுகொலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் நாள்தோறும் இறந்து வருகின்றனர். இந்த அழிவிலிருந்து தமிழ் மக்களைக் காக்கவும், அங்கு போர் நிறுத்தம் கொண்டுவரவும், சிறிலங்காவுக்கு வழங்கி வரும் ஆயுத உதவிகளை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி நாளை அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முன்பு கறுப்புத்துணி கட்டி வாயில் முழக்கப் போராட்டம் நடத்தப்போவதாகவும், நாளை அனைத்து நாட்டு தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கொடுத்து இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஆதரவு திரட்ட உள்ளோம்' என்று அவர்கள் தெரிவித்தனர். நாளை மறுநாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்த உள்ளோம். இந்தப் பேரணியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக போர்க் குற்றவாளியாக இந்தப் பேரணி வலியுறுத்த உள்ளதாக அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எமது தொலைக்காட்சி மீதான தடை; ஊடக சுதந்திரத்துக்கு விழுந்த மிகப்பெரும் கரும்புள்ளி: "மக்கள்" தொலைக்காட்சி கண்டனம்

[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009] "மக்கள்" தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி என ""மக்கள்"" தொலைக்காட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக "மக்கள்" தொலைக்காட்சியின் முதன்மைச் செயலாளர் அ.சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "மக்கள்" தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புக்களும் பாராட்டியுள்ளன. ஊடக நெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், சிறிலங்கா இராணுவம் "மக்கள்" தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது. "மக்கள்" தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் சிறிலங்கா அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் "மக்கள்" தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும். இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் "மக்கள்" தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பக்கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்ய வேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் "மக்கள்" தொலைக்காட்சிக்கும், ஊடக நெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 17, 2009

வன்னியில் 2,000 தமிழர்கள் படுகொலை; அனைத்துலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன: இரா.சம்பந்தர் ஆதங்கத்தோடு குற்றச்சாட்டு

[செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009]
சிறிலங்கா படையினர் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை, பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் இதுவரை சுமார் 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 4,500-க்கும் அதிகமானனேர் காயமடைந்தும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த அரசாங்கம் தமிழர்கள் மீதான நன்கு திட்மிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருக்கின்றது எனவும் குற்றம் சாட்டிய இரா.சம்பந்தன், அனைத்துலக நாடுகள் உடனடியாக தலையிட்டு இந்த அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சிறிலங்காவின் நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஊடக மாநாட்டில் தொடர்ந்து விளக்கமளித்த இரா.சம்பந்தன், பாதிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். அந்த மக்களை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி வழங்கக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ளார். வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறி வருகின்ற மக்களை விடுதலை புலிகள் கொலை செய்கின்றனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் கூறினார். விடுதலைப் புலிகள் எதற்காக மக்களை கொலை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய இரா.சம்பந்தன், அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறு மக்களை புலிகள் கொலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும் சுட்டிக் காட்டினார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வன்னிப்பெரு நிலப்பரப்பில் காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன உடலங்களை புதைப்பதற்கு கூட முடியாத நிலை. அந்தளவுக்கு இடைவிடாத எறிகணை பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று கூறி விளக்கமளித்தார். அதேவேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரது படைகளும் செய்து வருகின்ற இனப் படுகொலைகளை சில அனைத்துலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் குற்றம் சுமத்திய அவர் இவ்வாறான இனப் படுகொலைகள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுப் பிரதி தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மனிதப் பலி எடுக்கின்றது சிங்களப் பேரினவாதம்: வன்னியில் இன்று 48 தமிழர்கள் படுகொலை; 126 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009] வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகள் மீது இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டுத் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். பாலகுமார் விதுசா (வயது 14) தயானந்தன் அம்பிகா (வயது 44) சசிக்குமர் ஸ்பேயன் (வயது 60) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். விக்கினேஸ்வரன் கஜனி (வயது 07) சசிக்குமார் தேனிலவன் (வயது 05) பாலகுமார் விதுசா (வயது 16) தயானந்தா அம்பிகாவதி (வயது 45) தவம் பெனடிற் (வயது 61) சின்னத்தம்பி (வயது 61) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ரவீந்திரன் றோஜினி த.சுபாசினி தர்மலிங்கம் ஜெனி தர்மலிங்கம் அஜந்தன் சு.ஞானாம்பிகா சோமசுந்தரம் விக்கினேஸ்வரராஜா விக்கினேஸ்வரராஜா கரன் அரவிந்தன் கந்தையா முத்துக்குமார் க.நந்தினி சிவச்செல்வன் த.வனஜா த.அரவிந்தன் த.கிநிசா பாலராசா சந்திரகுமார் சித்திரவேல் ஆகியோர் காயமடைந்துள்ளனர். தேவிபுரத்தில் 28 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். வள்ளிபுனத்தில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது - ஜெயானந்தமூர்த்தி

[செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009] விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். ஆனால் இந்திய உள்துறை அமைச்சரின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது என த.தே.கூ. மட்டு மாவட்ட பா.உ. எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். முதலில் ஆயுதங்களை களைய வேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்தியாவில் வைத்து கூட்டமொன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக லண்டன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜெயானந்தமூர்த்தி பா.உ. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சு வார்த்தை நடத்த இந்தியா நடுநிலையாளராக கடமையாற்ற முன்வருவதாகவும் ஆனால் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென இந்திய அமைச்சர் பா.சிதம்பரம் கூட்மொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென அவர் நிபந்தனை விதிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்குமே ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அதுபோன்று தமிழ் மக்கள் தங்களது பாதுகாப்பு என்பது விடுதலைப் புலிகளும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதமுமே என்பதை பல தடவைகளின் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென இந்திய அமைச்சர் கூறும் கூற்றை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை விடுதலைப் புலிகள் ஆயுதம் கழைய வேண்டுமென யார் கூறினாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும். இந்த ஆயுத ஒப்படைப்பு என்ற விடயம் தமிழீழ போராட்ட வரலாற்றில் புதிய விடயமல்ல. இது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மூலமாக கடந்த காலத்தில் நல்ல பாடத்தையும் கற்றுத் தந்தது என்பதை எவரும் மறந்துவிட முடியாது. கடந்த 1987 ஆம் ஆண்டில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா விடுதலைப்புலிகளின் ஆயுதத்தைக் கழைந்தது. அதன் பின் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப் புலிகளுடன் இந்திய சமாதானப்படை போர் புரிந்தது. இந்த ஒப்பந்தமும் ஆயுதக்களைவும் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா போட்ட திட்டமாகும். ஆனால் இதில் விடுதலைப் புலிகள் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றனர். அப்படியான ஒரு திட்டத்தை இந்தியா செயல்படுத்த மீண்டும் முனைகின்றது. தற்போது மிகமோசமான போரை சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியாவும் துணை போகின்றது. இப்போரினால் தினமும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியா போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை விடுத்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டுமென கூறுவது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையாகும். எனவே இந்தியா பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதானால் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப்புலிகளுக்கு நிபந்தனை விதிப்பது ஆரோக்கியமானதாக அமையாது. என அந்த செவ்வியில் ஜெயானந்தமூர்த்தி எம்.பி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் இறந்தோருக்காக கதறிய இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம்

[செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009] அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை - காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிப்பரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளதாவது: நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல; இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம்; எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது. ஈற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம்; போராடியிருக்கின்றோம்; இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது. வடமராட்சியில் 'ஒப்ரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். 'ஜெயசிக்குறு' காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள். ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக்கூடாது. இன்று - உலகம் முழுவதிலும் - ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு - அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் - செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது. இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான். அண்மைய காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப்படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும். புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும். நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும். எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன. இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுத்தப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு லட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50-இலிருந்து 60-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100-க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது. கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன. அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன. அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம். இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக்காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம். ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர். ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும். நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார் யோகி.

அக்கினியில் சங்கமமான வீரப் புதல்வர்களுக்கு மெல்பேர்ணில் மலர் வணக்கம்

[செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009] உக்கிரமடைந்துள்ள சிறிலங்கா அரச படைகளின் இன அழிப்பு நடவடிக்கையால் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு வரும் அப்பாவி தமிழ் மக்களின் அழிவு குறித்து தொடர்ந்தும் மெளனமாக இருந்து வரும் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் வகையில் தம்மை தாமே அக்கினியில் கரைத்துக்கொண்ட வீரப்புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. ஹைடில்பேர்க் சென். ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (19.02.09) மாலை 7:00 மணியளவில் இந்த மலர்வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் வீரப் புதல்வர்களுக்கும் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தாயக ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மலர்வணக்கம் செலுத்தப்படுவதுடன் நினைவுரைகளும் இடம்பெறவுள்ளன. மெல்பேர்ண் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இந்த வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளும்படி நிகழ்வு ஏற்பாட்டாளர்களான அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.

Monday, February 16, 2009

உயிரை ஆயுதமாக்கி போராடும் மக்கள் இராணுவமே விடுதலைப்புலிகள் - இயக்குநர் சீமான்

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] ஈழத்தமிழ் மக்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரனுக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய இயக்குநர் சீமான் " உயிரை ஆயுதமாக்கி போராடும் மக்கள் இராணுவமே விடுதலைப்புலிகள்" என்று உணர்ச்சிபொங்க உரையாற்றினார். இக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தமிழ் தேசியப்பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். இயக்குநர் சீமான் உரையாற்றுகையில், " இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மகிழுந்து எரிக்கிற கட்சியாக காங்கிரசு கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய மகிழுந்தை எரித்தவர்களை, இந்திய பொதுவுடைமைக்கட்சியின் அய்யா தா.பாண்டியன் அவர்களின் மகிழுந்தினை எரித்தவர்களை கைது செய்யாதது ஏன்? நான் கலவரம் செய்வதாக புதுச்சேரி அரசு சொல்கிறது. கலகக்காரர் பெரியாரின் பேரன் நான். தமிழின எழுச்சிக்காக கலகத்தைச் செய்தேன். தமிழர்கள் ஜனநாயகவாதிகளாக இருக்கிறார்கள். முத்துக்குமரனும் ஜனநாயகவாதியாகத்தான் இருந்திருக்கிறான். அதனால்தான் தீக்குளித்தான். ஆனால் நாடு சொல்கிறது தமிழன் தீவிரவாதி என்று. முத்துக்குமரன் தீவிரவாதி, நான் தீவிரவாதி ஆனால் என் மகிழுந்தையும், தா.பாண்டியன் மகிழுந்தையும் எரித்த காங்கிரசுகாரன் தேசியவாதி. தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை இராஜபக்சே சொல்லவில்லை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது. புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு.7 நாடுகளின் இராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும். உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் " என்றார். கூட்டத்தில் பேசிய சீமான், நடுவண் அரசையும், இலங்கை அதிபரையும் சற்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இடையில் பேசிய அவர் ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார். இலங்கையில் போரை நிறுத்தக்கோரியும், இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் புதுவையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந் திகதி சந்தித்த இயக்குநர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை காவலர்கள் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் பிணையில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரசு கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார். சீமானை கைது செய்ய புதுச்சேரி காவலர்கள் தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் மூன்றாம் முறையாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, February 15, 2009

ஈழத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: ஈழம் சென்று மருத்துவம் செய்ய தயார் எனவும் அறிவிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] ஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஈழத்தில் நடைபெற்று வரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா, "இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார். தொடர்ந்து, ஹிந்தியில் உரையாற்றிய சென்னை மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டும் எம்.பி.பி.எஸ் மாணவர் குசன் சிங் குப்தா, "மருத்துவப் படிப்பு என்பது உயிர் காக்கும் உன்னத தொழிலுக்கானது. ஆனால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். நாள்தோறும் காயமடைந்தும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அங்கு இரத்தம் சிந்தப்படுகிறது. இதை நாங்கள் இன ரீதியாக வேறுபடுத்த விரும்பவில்லை. மனிதர்களை கொல்லும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. இப்போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் தெய்வநாயகம், இரவீந்திரநாத் மற்றும் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஸ்குமார், சதீஸ்குமார் உள்ளிட்ட 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு: தமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட - வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற்று சனிக்கிழமை இரவு "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை, கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. நிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டதாக அந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார். சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டியிருப்பதால் - தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனைப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவ அதிகாரி "புதினம்" செய்தியாளரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

"வீரத் தமிழ் மகன்" முத்துகுமாருக்கு சென்னையில் வீரவணக்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] ஈழத் தமிழர் விடுதலைக்காக தீக்குளித்து இன்னுயிர் ஈந்த "வீரத் தமிழ் மகன்" முத்துகுமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வீரவணக்க பேரணி பொதுக்கூட்டத்தினை சென்னையில் நடத்த தமிழீழ ஆதரவு மாணவர் பேரியக்கம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் எதிர்வரும் புதன்கிழமை (18.02.09) பிற்பகல் 4:00 மணிக்கு சென்னையில் திரண்டு மன்றோ சிலை முதல் சேப்பாக்கம் வரை வீரவணக்கப் பேரணியினை நடத்த திட்டமிட்டுள்ளனர் ஏற்பாட்டாளர்கள் என தெரித்தனர். பேரணியின் முடிவில் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் உரையாற்றும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஈழத் தமிழரைக் காக்க மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் கரம் கோர்ப்போம்: வைகோ அழைப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைத்த வணிகப் பெருமக்களே மனித சங்கிலி அணிவகுப்பை வெற்றி பெறச் செய்யுங்கள். ஆசிரியர்களே, மருத்துவர்களே, பொறியாளர்களே, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் சார்ந்தோரே, தாய்மார்களே, பெரியோர்களே, வாலிபர்களே, வளரும் பிள்ளைகளே தமிழீழ மக்களைக் காக்க மனித சங்கிலியில் பங்கேற்பீர் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நெஞ்சைப் பிளக்கும் துன்பச் செய்திகள் இலங்கையிலே இருந்து வந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று முன்தினம் (பெப்ரவரி 13 ஆம் நாள்) வள்ளிபுனம், சுந்தரபுரம் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 132 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 358 தமிழர்கள் படுகாயம் அடைந்தனர். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. சிறுக சிறுகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். படுகொலைக்கு உள்ளான தமிழர்களின் பிரேதங்கள் சாலை ஓரங்களிலும், மண் மேடுகளிலும் சிதறிக் கிடக்கின்றனவாம். மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டதில் ஒரு வாரத்திற்கு முன்பே 800-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் மரண காயமுற்றனர். உலகில் எந்த ஒரு பகுதியிலும், எந்தப் போரிலும், எந்த ஒரு மோதலிலும் மருத்துவமனைகள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது இல்லை. வானூர்திகள் குண்டு வீசியதில்லை. ஆனால், கொலைவெறியுடன் கொக்கரிக்கும் கிராதகன் ராஜபக்ச இக்கொடுமையைச் செய்கிறான். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரை முல்லைத்தீவில் இருந்து வெளியேறுமாறு இராணுவத்தின் மூலம் மிரட்டுகிறான். மருத்துவ பணியாளர்களை வெளியேற்றிவிட்டான். இலங்கையில் படுகொலைக்கு ஆளாகும் தமிழர்களைப் பாதுகாக்க இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கோர்டன் பிறவுண் போர் நிறுத்தத்தை கொண்டு வரவும், இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காணவும் சிறப்புத் தூதுவரை நியமித்தார். ஆனால், சிறிலங்கா அரச தலைவர் எங்கள் நாட்டில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை. இதில் பிரித்தானியா தலையிடக்கூடாது என்று கூறி சிறப்புத் தூதுவரை ஏற்கமாட்டோம் என்று தன் அமைச்சரின் மூலம் அறிவித்து விட்டான். உலகத்தில் எந்த நாட்டிலும் ஒரு இனப்படுகொலை நடக்குமானால் அதனைத் தடுப்பதற்கு அனைத்துலக நாடுகளுக்கு உரிமை உண்டு. அதுதான் சேர்பியாவில் நடந்தது. கொசாவாவில் நடந்தது. கிழக்குத் திமோரில் நடந்தது. பாலஸ்தீன காசாவில் நடந்தது. ஏன் அவ்வளவு தூரம் போவானேன்? கிழக்குப் பாகிஸ்தான் வங்கதேசமாக உருவெடுத்ததே இந்தியாவால்தானே. அதைத்தான் நேற்று புதுடில்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தின் போது அகில இந்தியத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பரதன் அவர்களும், பார்வார்ட் பிளக் கட்சிப் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் அவர்களும், தெலுங்கு தேச கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் எர்ரன் நாயுடு அவர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும், இந்திய தேசிய லோக்தளமும், தேசிய லீக் கட்சியும் வலியுறுத்தினார்கள். இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஸ்வந்த் சின்கா அவர்கள் 'இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. அது உள்நாட்டு பிரச்சினை என்று இலங்கை சொல்லமுடியாது. தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா முழு பலத்துடன் தலையிட வேண்டும். ஆயிரம் மடங்கு தலையிடலாம். ஆனால், இந்திய அரசு கடமை தவறி விட்டது. ஒரு மணி நேரம் கூட இனி தாமதம் கூடாது. ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் சிறிலங்கா அரசைக் கூண்டில் ஏற்ற வேண்டும்' என்று பேசினார். தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசு, குடியரசுத் தலைவர் உரையில் ஒரு மோசடியான அறிவிப்பைச் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசு இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இதனால் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் இந்திய அரசு கூறுகிறது. உலகத்தில் இதுவரை எந்தப் போர் நிறுத்தத்திலும் ஒரு தரப்பினர் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று எவரும் சொன்னதில்லை. உலகத்தில் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவில் இருந்தும் தமிழர்களை அழிக்க ராஜபக்ச திரட்டி உள்ள ஆயுதங்களை கடலில் போடுவானா? அப்படிப் போடச் சொல்ல இந்திய அரசு முன்வருமா? ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. புலிகளின் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மொத்தத் தமிழ் இனத்தையே அழிக்க சிங்கள அரசு துடிக்கிறது. இந்திய அரசு இதற்கு உடந்தையாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் கிட்லர் கோயபல்ஸ் மூலம் பொய்ச் பிரச்சாரம் செய்ததுபோல் சிங்கள அரசு அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விடுகிறது. முல்லைத்தீவில் சிங்கள அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் எவரும் செல்லவில்லை. ஆனால், 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக பச்சைப் பொய்யைப் பரப்புகிறது. கொத்துக்கொத்தாக தமிழ்க் குடும்பங்கள் குண்டுவீச்சுக்குப் பலியாகும் துன்பம் அங்கே. பிரபாகரன் அவர்களின் தாய்மாமனாரும், அவரது துணைவியாரும் இரண்டு நாட்களுக்கு முன் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வருகிறது. வயது முதிர்ந்தவர்களும், பச்சிளம் குழந்தைகளும் தாய்மார்களும் இராணுவத் தாக்குதலால் கொல்லப்படும் பேரழிவை எண்ணி மனம் பதைத்த முருகதாசன் என்கின்ற ஈழத் தமிழ் இளைஞன் லண்டனில் இருந்து புறப்பட்டு சுவிற்சர்லாந்து நாட்டுக்குச் சென்று ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு எதிரே தீக்குளித்து கருகிச் சாம்பலாகிவிட்டான். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசிப்பவர்களின் உள்ளங்களை உருக்கி, கண்களைக் குளமாக்கும் கடிதங்கள் எழுதி உள்ளான். அனைத்துலக சமுதாயமே எங்கள் தமிழ் மக்களை காக்க மனம் இரங்கமாட்டாயா? என்று சோகத்தைப் பிழிந்து, என் சாவு உங்கள் கவனத்தைத் திருப்பட்டும் என்று எழுதி உள்ளான். இதோ சில மணி நேரத்திற்கு முன்னால் ஈழத் தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவில் பிரதமர் வீட்டு முன்பாக தீக்குளிக்க முயன்றான் என்ற செய்தியும் இடியாகத் தாக்குகிறது. முத்துக்குமார் மேனியை எரித்த தீ, ஜெனீவாவில் முருகதாஸ் உடம்பிலும் எரிந்தது. தீயின் நாக்குகள் பள்ளபட்டி ரவியை, சீர்காழி ரவிச்சந்திரனை, சென்னை அமரேசனை, மலேசிய ராஜாவைத் துடிக்கதுடிக்க உடலைக் கருக்கி உயிரைப் பறித்துவிட்டது. இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கி குரல் கொடுத்தாக வேண்டும், அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த ஈழத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோர்த்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தமிழக மக்களே சிரம் தாழ்த்தி உங்களை மன்றாடி வேண்டுகிறேன். பாசத்தோடு வளர்த்தக் குழந்தை தடுமாறி தண்ணீரில் விழுந்து தத்தளித்து மூழ்க இருக்கையில் தாயின் கரங்கள் தாவிப் பற்றி அக்குழந்தையைக் காக்கத் துடிக்குமே. அப்படித்தான் தாய்த் தமிழகத்து மக்களும் நம் தொப்புள் கொடி உறவுகளை மரணத்தின் பிடியிலிருந்து காக்க கரங்களை நீட்டுங்கள். ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்ளுங்கள். உலகத்தின் அனைத்து நாட்டு மக்களின் கவனமும் இலங்கைத் தீவின் மீதும், தாய்த் தமிழகத்தின் மீதும் திரும்பி இருக்கின்றது. பெப்ரவரி 17 ஆம் நாள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம். சீனத்துப் பெருஞ்சுவரென வரிசையாக நிற்போம். ஆயிரம் அலுவல்கள் நமக்கு இருக்கலாம். ஆனால், ஒரே ஒரு கணம் சிந்தியுங்கள். உணவும் இன்றி, மருந்தும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடியும் தமிழர்கள் அங்கே. குண்டு வீச்சில் உடல்கள் சிதறி இரத்த வெள்ளத்தில் மிதக்கும் கொடுமை அங்கே. வீடு இழந்து, வாழ்விழந்து தங்கள் பூர்வீக மண்ணிலேயே பீரங்கி குண்டுகளால் வேட்டையாடப்படும் கொடுமை அங்கே. அழுவதற்கு கூட அவர்களுக்கு சக்தி இல்லையே. நமக்கு கரங்கள் இருப்பது துன்புறும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கன்றோ என்ற உணர்வுடன் மாலை 4:00 மணிக்கே ஆங்காங்கு மனித சங்கிலிக்கு ஆயத்தமாகுங்கள். ஐந்து மணி முதல் ஆறு மணி வரை மனித சங்கிலியாக மாறுங்கள். ஈழத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலிகளை உடைப்பதற்கு நாம் அமைப்போம் மனித சங்கிலி. விவசாயப் பெருமக்களே உயிர்களுக்கு உணவு அளிக்க ஏர் பிடித்த உங்கள் கரங்கள் மனித சங்கிலியாகட்டும். தொழிலாளத் தோழர்களே உழைக்கும் உங்களின் உன்னத கரங்கள் தமிழரைக் காக்கும் படைக்கலன் ஆகட்டும். மாணவச் செல்வங்களே உங்களை நம்பித்தான் தன் உயிர் ஆயுதத்தைத் தந்தான் முத்துக்குமார். கண்ணை இமை காப்பதுபோல் ஈழத் தமிழரைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். கரம் கோர்த்து நில்லுங்கள். ஈழத் தமிழரைக் காக்கும் அறப்போரை முன்னெடுக்கும் வழக்கறிஞர்களே மனித சங்கிலியை முறைப்படுத்தி வெற்றி காணுங்கள். அரசு பணியாளர்களே வேலை முடிந்து வீடு செல்லும்முன் மனித சங்கிலியில் பங்கேற்று தமிழரைக் காக்க உதவுங்கள். பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைத்த வணிகப் பெருமக்களே மனித சங்கிலி அணிவகுப்பை வெற்றி பெறச் செய்யுங்கள். ஆசிரியர்களே, மருத்துவர்களே, பொறியாளர்களே, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் சார்ந்தோரே, தாய்மார்களே, பெரியோர்களே, வாலிபர்களே, வளரும் பிள்ளைகளே தமிழ் ஈழ மக்களைக் காக்க மனித சங்கிலியில் பங்கேற்பீர். தாய்த் தமிழகத்தின் மனவேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் குண்டுவெடிப்பு: அதிகாரி ஒருவர் உட்பட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதிகாரி ஒருவர் உட்பட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று சனிக்கிழமை பௌத்த விகாரை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு விழா பெருமெடுப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது பிற்பகல் 2:40 நிமிடமளவில் பாரிய சத்தத்துடன் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உட்பட 12-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினருக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். குண்டுவெடிப்பினை அடுத்து அப்பகுதியில் பாரிய தேடுதலை சிறிலங்கா படையினர் நடத்தியதுடன் பொதுமக்கள் மீதான கெடுபிடிகள் பாரியளவில் காணப்பட்டன. குண்டுவெடிப்புச் சத்தம் பல மைல் தூரத்துக்கு அப்பாலும் கேட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு தாக்குதலில் பேரழிவைச் சந்தித்த 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையின் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவின் கிழக்கு பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடந்த 1 ஆம் நாள் மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னனி நிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. இச்சமரின் போது மேஜர் கமல் நாணயக்கார உட்பட 33-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. உக்கிரமான சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கோப்ரல் புஷ்பகுமார என்ற சிப்பாய் கிளைமோர் குண்டு ஒன்றுடன் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. படையினரை ஒட்டுசுட்டான் பகுதிவரை பின்தள்ளுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, பிரித்தானிய நாடுகளின் போக்கில் மாற்றம் வர புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களே காரணம்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] சிறிலங்காவின் எதிர்ப்பையும் மீறி அண்மையில் சிறப்பு பிரதிநிதியை பிரித்தானியா நியமித்ததற்கும் இந்திய அரச தலைவரின் உரையில் காணப்பட்ட மாற்றத்திற்கும் உலகு எங்கும் வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களே காரணம் என கொழும்பு ஆங்கில வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இலங்கையில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அரசியல் வழிமுறைகளை ஆராய்வதற்கும், அங்கு போரினால் துன்பப்படும் மக்களின் மனிதாபிமான தேவைகளை கண்டறிவதற்கும் என பிரித்தானியா சிறப்புத் தூதுவர் ஒருவரை கடந்த வாரம் நியமித்தது. இதற்கு சிறிலங்கா அரசு அதிகப்படியான எதிர்ப்புக்களை காட்டி வருகின்ற போதும் பிரித்தானியா தனது போக்கில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. பிரித்தானியா சிறிலங்காவுக்கு சிறப்புத் தூதுவரை விரைவில் அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. அதனையும் சிறிலங்கா அரசு எதிர்த்து வருகின்றது. பிரித்தானியாவின் இந்த மாற்றத்திற்கு பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அந்த அரசுக்கு கொடுத்து வரும் அழுத்தமே காரணம் என கொழும்பு அரசு நம்புகின்றது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் செயற்பட்டு வருகின்றார். இவருக்கு பிரித்தானியாவில் வாழும் ஆசிய மக்களில் 16 ஆயிரம் பேரின் வாக்கு பலம் உள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் போரை நிறுத்தக் கோரி அண்மையில் பிரித்தானியாவில் மிகப்பெரும் பேரணி ஒன்றும் இடம்பெற்றிருந்தது. பிரித்தானியாவின் பிரதமர் கோடன் பிறவுண், இந்திய அரச தலைவர் பிரதீபா பட்டேல் ஆகியோர் இலங்கை தொடர்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்த இந்திய அரச தலைவர், விடுதலைப் புலிகள் விரும்பினால் ஆயுதங்களை கைவிடலாம் என தெரிவித்தது இந்தியாவின் போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே சிறிலங்கா அரசு பார்க்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை கடற்கரையில் சிறிலங்கா படையினரின் புதிய ஏவுகணை தளங்கள்: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் சிறிலங்கா படையினரின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக "லக்பிம" ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளனர். இதேவேளை, விடுதலைப் புலிகளின் பரப்பளவு குறைந்து வருவதனால் 57 ஆவது படையணியையும் பின்னிருக்கை படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த படையணி விசுவமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது. புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றும் 53 ஆவது டிவிசன்களும், நடவடிக்கை படையணி - 04 மற்றும் நடவடிக்கை படையணி - 08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ-36 நெடுஞ்சாலையின் வடபகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. புதுக்குடியிருப்புக்கு தென்புறம் உள்ள பாதுகாப்பு படையினரின் நிலைகளை ஊடறுத்து காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம். அது நிறைவேறினால் இராணுவம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீர தமிழ்மகன் முருகதாசனின் வீரவணக்கம்

Saturday, February 14, 2009

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

[சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி. தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார். புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது. தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

101 வயது "பயங்கரவாதி"; வயோதிபர் இல்லத்தை தாக்கியது சிறிலங்கா: வன்னியில் இன்று 55 தமிழர்கள் படுகொலை

[சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூதாளர் பேணலகம் "அன்புச்சோலை மூதாளர் பேணலக"த்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 4 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வள்ளி ஆச்சி (வயது 99) கறுப்பையா (வயது 101) பொன்னம்மா (வயது 80) இளையபிள்ளை (வயது 86) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். வேலாச்சி (வயது 97) செல்லையா (வயது 98) பழனி (வயது 79) கிருஸ்ணன் (வயது 80) இராஜேஸ்வரி (வயது 67) பராமரிப்பாளரான கருணாகரன் (வயது 35) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிக்குள் இருந்த அன்புச்சோலை மூதாளர் பேணலகம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது வேவு பார்த்து தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றயல் பகுதிகளில் இன்று சிறிலங்கா வான் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 98 பேர் படுகாயங்களுக்கும், எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை நோட்டம் பார்த்து சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி அடையாளம் காட்டிய போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜபக்சவின் நிலைப்பாட்டை மத்திய அரசு வழிமொழிந்திருக்கிறது: குடியரசுத் தலைவர் உரை குறித்து பழ.நெடுமாறன்

[சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] இலங்கைப் பிரச்னையில், அந்த நாட்டு அதிபர் ராஜபக்சவின் நிலைப்பாட்டை மத்திய அரசு வழிமொழிந்து இருக்கிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போர் நிறுத்தம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு முழுமையானதாக இல்லை. ஏற்கெனவே, இலங்கை அதிபர் ராஜபக்ச எடுத்துள்ள நிலைப்பாட்டினையே இந்திய குடியரசுத் தலைவரும் வழி மொழிந்து இருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலர்களாக விடுதலைப்புலிகள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களும் ஆயுதங்களை கீழே வைத்து விட்டால் அந்த மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுவிடும். தமிழினப் படுகொலையை நடத்த இலங்கை இராணுவத்துக்கு வசதியாகி விடும். பாலஸ்தீனப் பிரச்னை... பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் திடீரெனப் புகுந்து அப்பாவி மக்களை படுகொலை செய்தது. இதனை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்தன. உடனடியாக, இஸ்ரேலியப் படை காஸா பகுதியில் இருந்து வெளியேற வேண்டுமெனவும், அங்கு இருதரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் இந்தியாவும், உலக நாடுகளும் வற்புறுத்தின. ஆனால், போர் நிறுத்தத்துக்கு நிபந்தனையாக பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென இந்தியாவோ, பிற நாடுகளோ கூறவில்லை. எரிவதை இழுத்தால்...எரிவதை இழுத்தால் கொதிப்பது நிற்கும் என்ற பழமொழிக்கு இணங்க இலங்கை அரசுக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ ரீதியான உதவிகளை நிறுத்தினால் ஒழிய உண்மையான போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு ஒரு போதும் சம்மதிக்காது. இலங்கை இராணுவத்தால் மருத்துவமனைகள் தாக்கப்பட்டு, மருத்துவர்களும், தாதிகளும் வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே, உடனடியாக மருத்துவர்கள் குழு ஒன்றை அனுப்பி உதவ வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனஅழிப்பை நிறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள பிரிட்டனின் சமாதான முயற்சியை வரவேற்கின்றோம்: தமிழீழ விடுதலைப்புலிகள்

[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு, மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு, பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுணை இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்ததை விடுதலைப் புலிகள் வரவேற்கின்றோம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விசேட பிரதிநிதி டெஸ் பிறவுணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், அங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்தி சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உள்ளதென்றும், ஆனால் பிரித்தானிய அரசினால் தற்போது முனெடுக்க இருந்த சமாதான முயற்சிகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டிய அவர், 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடுதலைப் புலிகள் இன்னமும் மதிப்பதாகவும், இம்முரண்பாட்டிற்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்கு தாம் இன்னமும் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியா இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்தமையானது இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இனமுரண்பாட்டிற்கு அரசியல் தீர்வு காண உதவும் என்பதோடு, வன்னிப் போர்ப் பிராந்தியத்தில் அகப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதலளிக்கும் ஒன்றாகவும் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒருமுறை சமாதான விரும்பிகள் யார் என்பதை புலிகள் பிரித்தானிய அரசுக்கு தெள்ளத் தெளிவாக்கியுள்ளனர் என அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, செனட்குழு

[சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] இலங்கையில் குறிப்பாக வன்னி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, செனட்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிராந்திய ரீதியிலான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடாக எதிர்வரும் 24ம் திகதி இலங்கை விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய வலயங்களுக்கு பொறுப்பான செனட்டர் ரொபர்ட் கெர்ஸி தெரிவித்துள்ளார். முதலில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக கெர்ஸி மேலும் தெரிவித்துள்ளார். வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கக் கூடிய முழுமையான அதிகாரம் இக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் போக்கு: இந்திய நாடாளுமன்றத்தில் கண்டனம்

[சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] இலங்கை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் மேல் சபையிலும் எழுந்தது. இந்த பிரச்சினை மீது உரையாற்றிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் போக்குக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினர். நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின் போது இலங்கை பிரச்சினை எழுந்தது. அப்போது, பாரதீய ஜனதா தலைவர் சந்தோஷ் கங்வார் உரையாற்றுகையில், "இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்களத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்'' என குறிப்பிட்டார். பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பர்துஹாரி நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில், "இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தவறி விட்டது. இலங்கை தமிழர் நலம் காக்கப்பட வேண்டும்'' என்றார். ஏ.கிருஷ்ணசாமி (தி.மு.க.) உரையாற்றுகையில், "தமிழர்கள் மீது எரிகுண்டுகளை இராணுவம் பயன்படுத்துகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம். அப்பாத்துரை, "தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டு இருக்கின்றது'' என்று குற்றம் சாட்டினார். சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.) உரையாற்றுகையில், "சிறிலங்காவுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபா தாராள கடன் கொடுத்து இருக்கிறது. ஆனால் அந்த பணத்தின் மூலம், சீனா, பாகிஸ்தானிடம் இருந்து இராணுவ தளவாடங்களை வாங்கி, அதனை விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பயன்படுத்துகின்றது'' என்றார். என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்) உரையாற்றுகையில், "இலங்கையில் அமைதி திரும்பவும், தமிழர்கள் பாதுகாக்கப்படவும் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும்'' என்றார். கார்வேந்தன் (காங்கிரஸ்) உரையாற்றுகையில், "தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அநாதையாக நிற்கின்றனர். தமிழர்கள் இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சிறிலங்கா அரசு ஏற்க வேண்டும்'' என்றார். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பேராசிரியர் இராமதாஸ் உரையாற்றுகையில், "இலங்கை தமிழர் பிரச்சினை, இங்குள்ள தமிழர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. அது இந்தியர்களின் பிரச்சினை. இதனை இலங்கையின் உள் நாட்டு பிரச்சினை என்று நாம் ஒதுக்கி விட முடியாது'' என்றார். எம்.அப்பாதுரை (இந்திய கம்யூனிஸ்ட்), ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.), இ.பொன்னுசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோரும் உரையாற்றினர். இதேவேளை, மேல் சபையிலும், இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்தது. இதன் மீது, தமிழ் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றினர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் உரையாற்றியதாவது: இந்தியாவில் இருந்து, சிறிலங்கா இராணுவ உதவி வழங்கப்படுகிறது. இதனை சிறிலங்கா அரசு, தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது. எனவே, மத்திய அரசு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும். இலங்கையில், தமிழர்களை கொல்லும் அரசுக்கு, இந்தியா உதவக்கூடாது. அங்கு மனித உரிமைகளை, இராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூட செல்ல முடியவில்லை. மனித உரிமை மீறலை தடுக்க முக்கியத்துவம் கொடுத்து, மனிதாபிமான உணர்வுடன் இந்தியா செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த பிரச்சினையை, மத்திய அரசு எடுத்து சென்று, தீர்வு காண வேண்டும். இலங்கை பிரச்சினை தொடர்பாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேச பிரணாப் முகர்ஜி சிறிலங்கா செல்வார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அவர் சிறிலங்கா செல்லவே ஒரு மாதம் ஆகி விட்டது. அவர், அங்கே என்ன பேசினார் என்று தமிழக முதலமைச்சருக்கே தெரிவிக்கப்பட வில்லை. இரு வருந்தத்தக்கது" என்றார் திருநாவுக்கரசர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா உரையாற்றியதாவது: இலங்கையில், 3 லட்சம் தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி இல்லை. அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வையாளராக மட்டும் இந்தியா இருக்கக்கூடாது. சிறிலங்கா அரசின் மீது மத்திய அரசு தற்போது கொண்டு இருக்கும் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள பிரச்சினை, அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை என்று கருதி மத்திய அரசு ஒதுங்கி விடக்கூடாது. சிறிலங்காவுக்கு இந்தியா கதுவீ கருவிகளை கொடுத்தது முற்றிலும் தவறான காரியம். இந்திய கடற்படை கப்பல்கள், சிறிலங்காவுக்காக சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவதும் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 70 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு மேலும் உதவிகளை வழங்க வேண்டும் என்றார் டி.ராஜா. வி.மைத்ரேயன் (அ.தி.முக.) உரையாற்றிய போது, "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம்'' என்று குறிப்பிட்டார். இறுதியாக, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இராஜாங்க மந்திரி வி.நாராயண சாமி பதில் அளித்தார். அவர் உரையாற்றுகையில், "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். தமிழர்கள் மீதான தாக்குதலை, இந்தியா ஒருபோதும் ஆதரித்தது இல்லை. தமிழர் பிரச்சினையில், மத்திய அரசின் நிலைப்பாடு, கொள்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரச தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டு இருக்கிறார்'' என தெரிவித்தார்.

ஐ.நா. முன்றலின் முன்பாக தமிழ் இளைஞர் தீக்குளித்து மரணம்

[வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009] இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார் காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞர் லண்டனில் வசிப்பவர் எனவும், இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும், இவருக்கு 27 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகதாஸ் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று 14.00 மணியளவில் ஐ. நா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் கொல்லப்படுவதனை தடுக்காது மத்திய அரசு பொறுப்பின்றி செயற்படுகின்றது: வைகோவின் உண்ணாநிலை போராட்டத்தில் அத்வானி

[வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009]
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சிக்கலில் மத்திய அரசு அக்கறையின்றி செயற்படுவதாக செயற்படுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்குவதை கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் நாடாளுமன்றம் அருகே இன்று வெள்ளிக்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. புதுடில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் அருகே காலை 8:00 மணிக்கு உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது. .
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன், தேசியச் செயலாளர் அ.ராஜா, பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.இராமதாஸ், பொன்னுசாமி, அ.கி.மூர்த்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்வானி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசித் தாக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் மருத்துவமனைகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய கொடுமையை நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. இலங்கை வடக்குப் பகுதியில் தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாக்கப்படுகின்றனர்.
இவை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.
இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் வருத்தமளிக்கக்கூடிய விடயம் என்னவெனில், இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய மத்திய அரசு இந்த விடயத்தில் பொறுப்பின்றி செயற்படுகின்றது.
இலங்கை இனச் சிக்கலுக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சுக்கள் மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, இலங்கையில் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அத்வானி. முன்னதாக வைகோ ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய அரசுதான் அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. இராணுவ உதவி, ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி போன்ற அனைத்தையும் சிறிலங்காவுக்கு இந்தியா வழங்குகின்றது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது போது சிறிலங்காவுக்கு எந்த உதவியையும் இந்தியா வழங்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, நோர்வே, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா இதுவரை பெயருக்குக்கூட போரை நிறுத்தும்படி வலியுறுத்தவில்லை என்றார் வைகோ.
இப்போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும், இலங்கைக்கு வழங்கும் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

தானே அறிவித்த புதிய "பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா பீரங்கி தாக்குதல் 27 தமிழர்கள் படுகொலை; 116 பேர் படுகாயம்

[வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009] புதிய "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீதும் மற்றும் பிற பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 27 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த புதிய "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் 60-க்கும் அதிகமான ஆட்லெறி எறிகணைகளை செறிவாக வீசி தாக்குதலை நடத்தினர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரதான வீதியில் இன்று இரவு 7:50 நிமிடமளவில் நடத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதலில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்று காலை 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். க.பார்த்தீபன் (வயது 15) கண்ணன் (வயது 18) தர்மராஜா (வயது 51) சி.சதீஸ் (வயது 34) அ.கிறிஸ்டி குமுதா ஆகியோர் கொல்லப்பட்டனர். புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 8:00 மணியளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். வீதியில் சென்று கொண்டிருந்த சுமையூர்தி மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அதில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் சிவகுமார் சசிக்குமார் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.