Wednesday, November 04, 2009

ஒப்பறேசன் தமிழீழம் - பாகம் 2


சிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்? என்கின்ற கேள்விகளோடும் அவற்றிற்கான பதில்களை, அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் எண்ணத்துடனேயுமே முதல் கட்டுரை (ஒப்பறேசன் தமிழீழம் - பாகம் 1) நிறைவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இக்கட்டுரையின் பிறிதொரு பகுதியில் எழுதவிருந்த சில விடயங்கள் பற்றி அதற்கு முதல் பேச வேண்டியுள்ளது. காரணம் முதல் கட்டுரை எழுதி சுமார் இரு வார இடைவெளிக்குள் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல நூறு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றன. அவை கூறும் சாராம்சம் இப்பொழுது எழுதப்போகும் விடயத்தோடு ஒன்றிப்போயுள்ளது.

அத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்பியவர்களில் அநேகமானவர்கள் தமிழீழ மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த சில ஈழத்தமிழர்கள், தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்க தேசங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் சில முகவரியிடப்படாதவை!

அத்தனை கடிதங்களும் இங்கே கூறப்படும் மூன்று விடயங்களையே தாங்கியிருக்கின்றன. “நாங்கள் தமிழீழ விடுதலைக்காக எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராய் உள்ளோம். தனித் தமிழ் அரசுக்காக விதைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் மாவீரர்களிற்கு என்றும் உண்மையாயும் விசுவாசமாயும் இருப்போம். எவ்வேளையிலும் எவ்வழியிலும் தமிழரின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்காய் போராட தயாராய் உள்ளோம்”

அத்தனை கடிதங்களும் தமிழீழ தேசத்தின் ஆன்மாவின் குரலாக விளங்குகின்றன. தமிழர்களின் ஆழமான அபிலாசைகளை பிரதிபலித்து நிற்கின்றன. அத்துடன் தமிழ் இனம் ஜாதி மதம் கட்சிகள் இயக்கங்கள் பிரதேசங்கள் வாழும் நாடுகள் கடந்து தன்னிலை உணரத் தலைப்பட்டிருப்பதை அல்லது தள்ளப்பட்டிருப்பதை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.

இந்நிலையில் நின்றபடியே புலி என்ற சொல் பற்றியும் புலிகள் பற்றியும் பேசுவோம். இது இன்னும் பல கேள்விகளிற்கும் குழப்பங்களிற்கும் நிச்சயம் விடைசொல்லும். தமிழ் இனத்தின் விடுதலைப் பயணத்தை உந்தித்தள்ள உதவும்.

முன்பொருமுறை தமிழீழத்தின் வரைபடம் பற்றிய வினா ஒன்றின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் கூறியிருந்தார். "எங்கெல்லாம் இலங்கை இராணுவத்தின் குண்டுகள் வீழ்கின்றனவோ அப்பிரதேசங்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்திப் பார்க்கும் போது தெரியும் நிலப்பரப்பே தமிழீழம்" என்று.

இதை ஒத்த பதில் ஒன்றையே இப்பொழுதும் வேறு கேள்விகளிற்கும் கூறுதல் சாலப்பொருத்தமாகின்றது.

ஒற்றைவரியில் சொல்வதானால் யார் எல்லாம் புலிகள் என்றால் தமிழ் இன எதிரிகளினால் உடல் உள ரீதியாகவும் கல்வி சமூக பொருளாதார கலாச்சார ரீதியாக என ஏதோ ஒரு வகையில் பாதிப்பிற்குள்ளாகும் ஒவ்வொரு தமிழனும் புலிதான். அவன் தமிழீழத்திலும் இருக்கலாம் தென்னிலங்கையிலும் இருக்கலாம் தமிழகத்திலும் இருக்கலாம் கர்நாடகாவிலும் இருக்கலாம் அல்லது மலேசியா சிங்கப்பூரிலோ தென்னாபிரிக்காவிலோ புலம்பெயர் தேசங்களிலோ எங்கும் இருக்கலாம். எந்தக்கட்சிக்குள்ளும் எந்த இயக்கத்துக்குள்ளும் இருக்கலாம் ஏன் எங்கு பிறக்கப்போகின்றான் என்று தெரியாமல் கருவறைகளில் கூட தூங்கிக்கொண்டும் இருக்கலாம்.

காரணம் புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுபவர்கள். ஒரு தேசத்தின் தேசிய இனத்தின் ஆன்மாவோடு ஒன்றிப்போயிருப்பவர்கள். தமிழின எதிரிகள் எவ்வேளையிலும் அஞ்சும் ஆத்திரம் கொள்ளும் உருவகமாகவும் உளவியலாகவும் விஸ்வரூபமெடுத்து நிற்பவர்கள். அவர்கள் எப்போது எங்கு வேண்டுமானாலும் எப்படியும் போராடுவார்கள். அதை தீர்மானிக்கவேண்டியது எதிரிகள் தான்.

ஒரு ஐம்பத்தெட்டும் எண்பத்தி மூன்றும் சில ஆயிரம் புலிகளை ஈழதேசத்தில் உருவாக்கியதென்றால் முள்ளிவாய்க்கால் உலகப்பரப்பெங்கும் பல நூறாயிரம் புலிகளை உருவாக்கியுள்ளதென்பதே யதார்த்தம். ஆனால் நிறையப்பேர் தாங்கள் புலிகள் தான் என்பதை இன்னும் தங்களளவில் அடையாளம் காணவில்லை. இதற்கு சில வேளை சில காலம் எடுக்கலாம்.

புலிகளை அழிப்பதாய் நினைத்து பன்மடங்கு அதிகரித்திருக்கின்றார்கள் என்பதும் ஈழக்கோரிக்கையை இல்லாதொழிப்பதாய் சொல்லி வலுப்பெற வழிசமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுமே யதார்த்தம்.

தமிழ் இன எதிரிகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக சிங்கள தேசத்தைப் பொறுத்தவரையில் புலிகளை அழிப்பதை பற்றி சிந்திப்பதை விட புலிகள் உருவாகாமல் இருக்க ஒவ்வொரு தமிழனையும் உடல் உள ரீதியாகவும் கல்வி சமூக பொருளாதார கலாச்சார ரீதியாகவும் பத்திரப்படுத்துவதே ஆரோக்கியமானது.

ஏனெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புலிகளின் உடல்களை அழித்தலும் அல்லது இனம் காணுதலுமே தமிழின எதிரிகளினால் எக்காலத்திலும் சாதிக்கக்கூடிய அதி உச்ச சாதனையாக இருக்கும். தவிர உலகப்பரப்பெங்கும் காற்றுப்போல் ஊடுருவியிருக்கும் இனவெறியின் விளைவால் உருவாகிக் கொண்டிருக்கும் புலிகளையும் உணர்வுகளையும் முழுமையாக இனம் காணவோ அழித்தொழிக்கவோ சிங்கள இனவெறியர்களால் மட்டுமல்ல இந்த உலகின் அத்தனை வல்லாதிக்க சக்திகளால் கூட முடியாது. இதை எதிர்கொள்ள எந்த வியூகமும் பலனளிக்காது.

இந்நிலையில் குறிப்பிட்டவர்களின் பெயர்களைச் சொல்லி புலிகளை அடையாளம் கண்டுவிட்டோம் என்று நாளுக்கு நாள் அறிக்கை விடுவதெல்லாம் சின்னச்சின்ன உள் நோக்கங்களைக் கொண்டதே தவிர உண்மையில் உருப்படியான காரியம் அல்ல.

ஏனெனில் புலிகள் என்ற சொல் உலகளவில் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யார் எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் தமிழன் என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாக ஆழ வேரூன்றிவிட்டது. அதாவது தமிழன் என்ற சொல்லும் புலிகள் என்ற சொல்லும் இரத்தமும் சதையும் போன்றதாகிவிட்டது.ஆகவே இதை வேறு பிரிக்கும் பகீரத பிரயத்தனங்களால் ஒரு போதும் அவர்கள் எதிரிபார்க்கும் பலனைக் கொடுக்க முடியாது. வருகின்ற வேற்று நாட்டு அகராதிகளில் தமிழன் என்ற சொல் இருக்கும் இடத்தில் நிச்சயம் புலி இருக்கும். ஜாதி மதம் பிரதேசம் கட்சிகள் இயக்கங்கள் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த உலகில் நீங்கள் எந்த மூலைக்குச்சென்றும் உங்களை தமிழன் என்று அடையாளப்படுத்தும் போதும் அந்த வேற்று நாட்டவன் அல்லது வேற்று இனத்தவன் தமிழனை புலி என்றே அடையாளம் கண்டு கொள்கின்றான்.

அதே போல் சிங்கள தேசமும் அத்தனை தமிழனையும் புலிகளாகவே பார்க்கின்றது. சும்மா பேச்சுக்கும் சுயநலத்திற்காகவும் நண்பர்கள் என்றும் அரச ஆதரவு இயக்கங்கள் என்றும் கட்சிகள் என்றும் கட்டி அணைக்கிறார்களே தவிர உண்மையில் அத்தனை தமிழனையும் ஜாதி மதம் பிரதேசம் கட்சி இயக்கம் கடந்து புலியாகவே பார்க்கிறார்கள். சந்தர்ப்பம் வரும் போது காலைவாரவே காத்திருக்கின்றார்கள். கழுத்தறுக்கவும் கருவறுக்கவுமே காலம் காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று பார்க்கவும்; தமிழர்களே தமிழர்களின் பாதுகாவலர்கள் என்பதை உறுதி செய்யவும் தமிழ் இன எதிரிகள் பல வரலாற்றுச் சான்றுகளை விட்டபடி பயணிக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு அண்மையில் நடந்த ஒரு சில சம்பவங்ளை பார்க்கும் போது அவை இன்னும் சில தெளிவுகளையும் தன்னிலை அறிதலையும் தரும்.

இலங்கையில் ஒரு மரண விசாரணை அதிகாரிக்கு வழங்கப்பட்ட சாட்சியம்….


“எனது கணவர் கூலி வேலை செய்பவர். இதனால் எமது மகன் பாடசாலைக்கு சென்றால் தலையில் குட்டுகின்றனர், கேலி செய்கின்றனர், திட்டுகின்றனர். இதனால் அவர் அங்கு தொடர்ந்து கல்வி கற்க மறுப்புத் தெரிவித்து வந்தார்.


இதனால் அந்தப் பாடசாலையில் இருந்து மகனை விலக்கி வேறு பாடசாலையில் சேர்க்க முற்பட்டபோது எந்தவொரு பாடசாலையிலும் எமது மகனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக சில பாடசாலை அதிபர்கள் முன்னர் எனது பிள்ளை கல்வி கற்ற பாடசாலையின் அதிபரிடம் மன்னிப்புக் கடிதம் கோரினர். மன்னிப்புக் கடிதம் இல்லாவிட்டால் பாடசாலையில் சேர்க்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.


பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், குண்டு வைப்பார் என்ற அச்சம் காரணமாக உங்கள் பிள்ளையினை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளலாம். தற்போது பிரபாகரனும் உயிருடன் இல்லை. இந்நிலையில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பாடசாலையிலும் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என அழுத்தமாக கூறினர்.


இதனால் மிகுந்த கவலை கொண்டு எனது கணவர் மகனை கட்டித்தழுவி உச்சி முகர்ந்த பின்னர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.


வறக்காபொல தம்பலதெனிய பாடசாலையில் எனது மகன் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்றான். அங்கு அவனுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 2 மாதமாக பல்வேறு துன்பங்களை கொடுத்தனர்.


வகுப்பு ஆசிரியர் தும்புத்தடியால் அடிப்பார், தலையில் குட்டுவார், தடியால் அடிப்பார், கீழ்த்தரமான வார்த்தையால் திட்டுவார். இதனால் எனது மகன் பாடசாலைக்கு செல்ல மறுத்தார்.


இதன் காரணமாக அந்தப் பாடசாலையில் இருந்து எனது பிள்ளையை விலக்கி, அம்பேபுஸ்ஸ வித்தியாலயம், வறக்காபொல காமினி வித்தியாலயம், அல்லியத்த வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் அனுமதி கேட்டும் உரிய பயன் கிடைக்கவில்லை, சில பாடசாலை அதிபர்களின் காலடியில் வீழ்ந்து மன்றாடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.”

தொடரும்..

அன்புடன்
கீர்த்திகன்
keerththikan@gmail.com

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.