Tuesday, October 27, 2009

தாய்நாடு அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது; மாற்றியமைக்கப் போவதாக சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009]

தாய் நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்கப் போவதாக இலங்கையின் கூட்டுப்படைத் தலைமையதிகாரி சரத் பொன்சேகா அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாசிங்டனுக்கு விஜயம் செய்துள்ள அவர்,அங்கு பௌத்த ஆலயம் ஒன்றுக்கு சென்ற போதே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்தக் கருத்து,சரத் பொன்சேகா அரசியலில் ஈடுப்படப் போவதற்கான கட்டியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நிகழ்வின் போது, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசிங்க மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்தா சூரியபண்டார ஆகியோர் பங்கேற்கவில்லை.

இதன்போது பௌத்த ஆலயத்தின் தலைமை பிக்கு மஹரகம தம்மஸ்ரீ தேரர், சரத் பொன்சேகாவுக்கு ஆசி வழங்கினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, அனைவரும் வன்னியின் யுத்த வெற்றியை பற்றி பேசுகிறார்கள். அங்கு இடம்பெற்ற இறுதி 10 நாள் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால், ஐயாயிரம் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த படைவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்காவிட்டால், யுத்தம் நிறைவுற்றிருக்காது. எனவே அவர்களுக்கு நாம் முதலில் வணக்கம் செலுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யப்பட வேண்டும்,மீண்டும் நாம்,ஒரு பிரபாகரன் தோன்றுவதற்கு வழிவகுத்து விடக்கூடாது, நாம் நாட்டை,பிழையான வழியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்ல தாம் தயாராக இருப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின் போது சரத் பொன்சேகாவுக்கு பலதத வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா கருத்துக்களை தெரிவிக்கும் போது அதற்கு பாரிய கரகோசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சரத் பொன்சேகா இந்த விஜயத்தின் போது அமெரிக்காவில் தமது உயர் கல்வியை கற்கும் மகளையும் சந்திக்கவுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.