விமானி குடிபோதையில் இருந்ததால், மும்பையிலிருந்து நியூயோர்க் செல்லவிருந்த ஏயார் இந்தியா விமானம் 45 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.
நேற்றுத் திங்கட்கிழமை விமானப் பயண நெரிசல் மிகுந்த நள்ளிரவில் இச்சம்பவம் நடந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பல வெளிநாட்டுப் பயணிகளும் இதனால் வெறுத்துப் போய் திட்டத் தொடங்கிவிட்டனர்.
அனைத்து விமானங்களின் விமானிகளுக்கும் இப்போது குடிபோதை டெஸ்ட் (Breathalyzer Test) நடத்தப்படுகிறது. விமானம் கிளம்புவதற்கு முன் இந்த சோதனை நடத்தப்படும். இந்த சோதனையில், விமானிகள் குடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள். மாற்று விமானிகள் அனுப்பப்படுவார்கள்.
நேற்று மும்பையிலிருந்து நியூயோர்க் நகருக்கு புறப்படத் தயாராக இருந்த ஏயார் இந்தியாவின் போயிங் 777-200, மிகவும் மதிப்பு வாய்ந்த, பெருமைக்குரிய விமானமாகக் கருதப்பட்டு வந்தது. காரணம் இதுவரை ஒருநாள் கூட இந்த விமானம் தாமதமாகக் கிளம்பியதே இல்லை என்று கூறப்படுகின்றது.
மும்பையிலிருந்து நியூயோர்க் நகருக்கு எங்கும் நிற்காமல் செல்லும் 'நொன் - ஸ்டாப்' விமானம் இது. 11 வெவ்வேறு 'டைம் ஸோன்'களை ஒரே மூச்சில் கடந்து செல்லும் இந்த விமானம், பயணிகளுக்காகக் கூட 5 நிமிடம் தாமதித்ததில்லை. இதனால் எப்போதும் இந்த விமானத்தில் இடம் பிடிக்க, இந்திய - வெளிநாட்டுப் பயணிகள் பெரிதும் விரும்புவதுண்டு.
ஆனால் முதல்முறையாக தனது விமானியால் நேற்று தாமதமடைந்திருக்கிறது இந்த விமானம்.
45 நிமிட தாமதத்துக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி ஒருவரை ஏற்பாடு செய்த பின் விமானம் தன் பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் விமானிகள் குடித்துவிட்டு விமானத்துக்குள் ஏறக் கூடாது என்பது விதி. அதற்காகவே குடிபோதை பரிசீலனை நடத்தப்படுகின்றது. இதில் முதல்முறை பிடிபடுபவர்களை எச்சரித்து விடுவிக்கும் ஏயார் இந்தியா, மறுமுறை தப்பு செய்தால் சேவையிலிருந்து நீக்கி விடுகிறது.
இவ்வாறு தவறு செய்வோருக்குக் கடுமையான தண்டனை என்று எதுவும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.