Sunday, August 17, 2008

அரசாங்கம் சர்வதேச யுத்தச் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் யுத்தத்தை முன்னெடுக்கின்றது – இரா.சம்பந்தன்

[ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008] இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்தச் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் யுத்தத்தை முன்னெடுப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரச படையினரின் வான் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல் மற்றும் ஆழ ஊடுருவும் பிரிவினரின் கிளைமோர்க் குண்டுத் தாக்குதல்களினால் பெருமளவிலான வன்னிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலான வன்னிப் பிரதேச மக்கள் மர நிழலில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கைகளின் மூலம் ஒருபோதும் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். யுத்தத்தின் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாதென இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கும், தமிழர் பிரச்சினைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே எனது கருத்து என அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு ஜனநாயக அரசாங்கமும் தமது நாட்டுப் பிரஜைகளை இவ்வாறான ஓர் நிலைக்குத் தள்ளிவிடாதென அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தமிழர்களது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்த விசேட செவ்வியின் போது இரா. சம்பந்தன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்களின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மூடித் தனமான தாக்குதல்களினால் பெரும்பாலான தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாறுவதனைத் தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வவுனியாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 11 படையினர் பலி- 19 பேர் காயம்

Sunday, 17 August 2008 வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பிற்பகல் 4:30 மணிவரை தீவிர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் படைத்தரப்பில் இழப்புக்கள் ஏற்பட, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர். இதில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது.

Sunday, 17 August 2008 முன்னாள் விடுதலை வீரர்களான நீங்கள் உங்கள் தாய் தேசம் முகம் கொடுத்திருக்கும் போர் நெருக்கடிக்கிடையில் தாய் நாட்டிற்கு நீங்கள் புரிய வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். இந்த தேசத்தின் மைந்தர்களான நீங்கள் எமது மக்களும் மண்ணும் எதிரியின் பேரவலத்துக்குள்ளளாவதை ஒரு போதும் விரும்பமாட்டீர்கள் மானமுள்ள வீரமுள்ள எந்த தூய வீரனும் இதை விரும்பமாட்டான் உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உணர்வும் குருதியில் ஓடும் ஓர்மமும் தேச விடுதலையை நோக்கி தள்ளவே செய்யும் இதன் முலம் நீங்கள் உயிரினும் மேலாக அன்பு செய்யும் தாய் நாட்டிற்கு ஆபத்து என்றவுடன் ஓடி வரும் உங்கள் கடமை உணர்ச்சியை காட்டுவதன் மூலம் என்றும் மதிப்பளிக்கப்படுவீர்கள். அன்புக்குரியவர்களே நீங்கள் விடுதலை அமைப்பிலிருந்து விலகி இன்று திருமண பந்தத்தில் இணைந்து உங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கையில் இணைந்திருக்கின்றீர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிரி சீர் குலைக்க விழைகின்றான். எங்களது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள சிப்பாய் குடும்பங்களையும் குழந்தைகழையும் பிரிந்து வந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியுமானால் விடுதலைக்காக போராடும் எங்களால் மட்டும் ஏன் முடியாது. எங்களால் முடியும் இந்த மனவுறுதி உங்களிடம் உண்டு எனவே அன்புக்குரிய முன்னாள் போர் வீரர்களே இந்த அவசரமும் அவசியமானதுமான வேண்டுகோளை நீங்கள் ஏற்று விடுதலை அமைப்பில் உங்களை உடனடியாக இணைத்து கொள்வீர்கள் என நம்புகின்றோம் எமது மண்ணில் எதிரியால் நிகழ்த்தப்பட்ட எத்தனையோ படை நடவடிக்கைகளை வல்வளைப்புகளை முறியடித்து சாதனை படைத்த வீரர்கள் நீங்கள் உங்களிடம் குறைவில்லாத போர் அனுபவமும் ஆற்றலும் நிறம்பி கிடக்கின்றது. நீங்கள் இன்று பெரும் படையாக எழும்பி நிற்கும் புதிய படை வீரர்களுடன் இணைவதன் மூலம் எதிரியின் இந்த வல்வளைப்பு முயற்சியை முறியடித்து எமது மக்கள் விரும்பும் விடுதலையை அவர்களுக்கு பரிசாக வழங்க முடியும் ஆகவே இந்த அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோளை உங்களிடம் உரிமையுடன் முன்வைக்கின்றோம் எனவும் தமிழீழ அரசியல்துறை தெரிவித்துள்ளது.