Thursday, August 30, 2007

சந்திரிகா - ரணில் திடீர் சந்திப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வு

[வியாழக்கிழமை 30 ஓகஸ்ட் 2007]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்று புதன்கிழமை நண்பகல் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இருவருக்குமிடையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தப் பேச்சுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள், அரசியல் நெருக்கடி நிலைமை மற்றும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாகவும் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மிக விரைவில் எதிரணியிலுள்ள கட்சிகளுடன் கலந்துரையாடுவது குறித்தும் பேசப்பட்டதாகவும் அறியவருகின்றது. இந்தச் சந்திப்பு நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. எங்கு சந்திப்பு இடம்பெற்றதென எதுவும் தெரிய வரவில்லை. ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படாமல் திடீரென இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் பிரதான ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீரவுக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பொன்று நாளை வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. கொழும்பு-7 இல் உள்ள சந்திரிகா குமாரதுங்கவின் அலுவலகத்திலேயே நாளை காலை 9 மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி லண்டனிலிருந்து நாடு திரும்பியிருந்த சந்திரிகா குமாரதுங்க மறுதினமே மங்கள சமரவீரவை சந்தித்து பேசுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், மங்கள சமரவீரவுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அச்சந்திப்பு நடைபெறவில்லை.

ஆனாலும், இருவரும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக தொலைபேசி ஊடாக நீண்டநேரம் பேசியிருந்தனர்.

சந்திரிகா குமாரதுங்க லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் முதன்முறையாக நாளை மங்கள சமரவீரவை சந்தித்து பேசவிருக்கிறார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது சகாவான முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மங்கள சமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டு தேசிய சபையாக இணைந்து கொண்டமைக்கு சந்திரிகா குமாரதுங்க லண்டனிலிருந்து பாராட்டு தெரிவித்திருந்த நிலையிலும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் பெரும் ஆதரவொன்று இருக்கும் நிலையிலும் நாளைய இச்சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.