Wednesday, August 29, 2007

தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்: அத்தாசின் மொழிபெயர்ப்பாளருக்கும் அச்சுறுத்தல்

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியை அதன் சகோதர ஏடான "லங்காதீப" வுக்கு சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் ஊடகவியலாளர் டபிள்யூ.ஜி.குணரட்னவுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சில நபர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை "லங்காதீப" நாளேட்டின் ஆசிரியர் வளாகத்தில் இக்பால் அத்தாசின் பத்திகளை மொழிபெயர்ப்பதனை நிறுத்துமாறு அச்சுறுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல்களை விடுத்தவர்களில் ஒருவர் தான் சிறிலங்கா வான்படையின் அதிகாரி என்று கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாசின் பாதுகாப்பு நீக்கப்பட்டதுடன், அவருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட சில நாட்களில் குணரட்னவுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இக்பால் அத்தாசிடம் இருந்து தமக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கை: மிக்-27 கொள்வனவு விவகாரம் தொடர்பான வெளியிட்ட கட்டுரையால் எழுந்துள்ள சூழ்நிலையில் அத்தாஸ் தனது பாதுகாப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அச்சமடைந்துள்ளார். பாதுகாப்பு நீக்கப்பட்டதில் இருந்து, அதிகளவான மிரட்டல்கள் வந்துள்ளதுடன், தனது கட்டுரை தொடர்பான தகவல்களின் மையத்தை அறிந்து கொள்வதற்கும், அதற்குரிய ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கும் பெரும் முயற்சிகள் நடந்து வருவதாக தமக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீண்டும், மீண்டும் துன்புறுத்தப்படுவதுடன், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர். இக்பால் அத்தாசின் விவகாரத்தை எமது அமைப்பு அவரின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட ஒரு உண்மையான அச்சுறுத்தலாகவே எடுத்துக் கொள்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.