[வெள்ளிக்கிழமை, 27 யூலை 2007] சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கை வருகை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஆளும் சுதந்திரக் கட்சி சார்பில் தீர்வுத் திட்டம் முன்வைத்தமை, விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆகியனவை நடந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியுள்ளது. அமைதி வழித் தீர்வுக்கு ஆதரவாக வடக்கு - கிழக்கிற்கு வெளியே வாழும் 52.9 விழுக்காடு சிங்களவர்களும், 93.1 விழுக்காடு முஸ்லிம்களும், 95.4 விழுக்காடு மலையகத் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வலிந்த இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சிங்களவர்களின் இக்கருத்தை 56.5 விழுக்காடு முஸ்லிம்களும் 69 விழுக்காடு மலையகத் தமிழர்களும் ஆதரிக்கவில்லை. எதிர்வரும் இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் யுத்தத்தில் வெற்றி பெறுவோம் என்று 43.6 விழுக்காடு சிங்களவர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் 40.9 விழுக்காடு முஸ்லிம்களும் 33.9 விழுக்காடு மலையகத் தமிழர்களும் இது தொடர்பில் வேறுவிதமாக அல்லது தெரியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால் நாட்டுக்கு எதுவித நன்மையும் இல்லை என்று 52.6 விழுக்காடு சிங்களவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 81.1 விழுக்காடு முஸ்லிம்களும் 58.8 விழுக்காடு மலையகத் தமிழர்களும் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. முன்னைய ஆண்டைவிட பாதுகாப்பு நிலைமை சீர்குலைவானது அதிகரித்துள்ளதாக பொதுவாக அனைத்து இன மக்களும் தெரிவித்துள்ளனர். கடத்தல்களும் படுகொலைகளும் அதிகரித்துள்ளதாகவும் பொதுவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. "வடக்கு - கிழக்கு இனப்பிரச்சினையால் முன்னைய ஆண்டுகளைக் காட்டிலும் வாழ்க்கைச் செலவினம் தற்போது அதிகரித்துள்ளதாக மூவின மக்களும் கூறியுள்ளனர். இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளால் இது இறுதிக்கு வரும் என்று 57.4 விழுக்காடு சிங்களவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்" என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி வழியிலான தீர்வை வலியுறுத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் குறித்து பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. மேலதிகமாக அமைதி முயற்சிகள் தொடரும் என்பது உறுதியில்லை என 50.9 விழுக்காடு சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு எதிராக அரசாங்கம் போதுமான அளவில் செயற்படுகிறது என்று பெரும்பான்மை சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியுள்ளது. மூவின மக்களிடத்தில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக இந்த மையம் தெரிவித்தாலும் இனப் பிரச்சினையில் தொடர்புபட்ட வடக்கு - கிழக்கு தமிழர்களிடையே இத்தகைய எதுவித கருத்துக் கணிப்பையும் அம்மையம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, July 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.