Friday, June 29, 2007

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சவப்பெட்டி ஊர்வலம்.!

[வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007,] பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சவப்பெட்டி ஊர்வல போராட்டமொன்றை கொழும்பில் நடத்தினர். அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப்போராட்டம் நுகேகொடையில் ஆரம்பமாகி கொழும்பு 7 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவரை இடம்பெற்றது.இந்த எதிர்ப்பு ஊர்வலத்திலும் மற்றும் போராட்டத்திலும் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் அண்மைக்கால செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். பல்கலைக்கழக மாணவர்களினால் தூக்கிவரப்பட்ட சவப்பெட்டிகளிலும் அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதையடுத்து மானியங்கள் ஆணைக்குழு கட்டிடத்திற்கு முன்னால் பொலிஸார் முட்கம்பிகளை போட்டு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததுடன் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரினால் வீதிக்கு குறுக்காகப்போடப்பட்டிருந்த முட்கம்பிக்கு பின்னால் நின்று எதிர்ப்பு கோசம் எழுப்பினர். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு பெரியாஸ்பத்திரி சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளில் பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.