[செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2007]பொடா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தமிழின ஆர்வலர்களான பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், புதுக்கோட்டை பாவணன், டாக்டர்.தாயப்பன், சாகுல் அமீது ஆகியோர் மீது தொடரப்பட்டிருந்த பொடா வழக்கை திரும்பப் பெறுவதாக, தமிழக அரசு இன்று செவ்வாய்க்கிழமை பொடா நீதிமன்றத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த பொடா வழக்கிலிருந்து இவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த ஐந்து பேரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் நீதிமன்றம் அளித்த பிணையில் இவர்கள் வெளியில் வந்தனர்.
இதற்கிடையில், பொடா சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை சீராய்வு செய்வதற்காக இந்திய நடுவணரசால் அமைக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக்குழு, இவர்கள் மீது பொடா வழக்கு தொடர்ந்தது தவறு என்றும் இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது. ஆனாலும் இந்தப் பொடா வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவில்லை.
கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட திமுக வின் தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள பொடா வழக்குகளை திரும்பப் பெறுவதாக திமுக அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் இந்தப் பொடா வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்த தமிழக அரசு, இதுகுறித்து சென்னை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்கு முறைப்படி தெரிவித்தது.
இன்று இது தொடர்பான விசாரணை வந்தபோது, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பழ.நெடுமாறன் உள்பட ஐந்து பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
நான் மதிக்கும் சில தலைவர்களில் நெடுமாறன்
ReplyDeleteஐயா முதன்மையானவர், வழக்கை திரும்ப பெற்றது
மட்டும் இன்றி அவர் சிறையில் இருந்ததிற்க்கு
வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டும்..