Sunday, February 18, 2007

பெப்ரவரி 21 இல் இணைத் தலைமைகளின் தொலைத் தொடர்பு மாநாடு.

[ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007]


இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவிருக்கும் தருணத்திலுமே இணைத்தலைமை நாடுகளின் இந்த விசேட மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை 5 வயதை பூர்த்தி செய்யும் தினமான பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு முன்தினம் இம் மாநாடு நடைபெறவிருப்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணைத் தலைமை நடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் தலை நகரங்களில் இருந்து சம நேரத்தில் தொலைத் தொடர்புகள் மூலம் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளன.

இம் மாநாட்டில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் ஜொன் ஹன்சன் பௌர், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோர் தொலைத் தொடர்புகள் மூலம் நிலைமைகளை ஆராய விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இம் மாநாட்டின் போது இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் பேச்சு மேசைக்கு வரவழைப்பதற்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் குறித்து இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் தீவிர கவனம் செலுத்தவரெனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இதேவேளை, இலங்கை அரசாங்கமும் சரி, புலிகளும் சரி இரு தரப்பினருமே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லையென தங்களுக்கு அறிவித்திருப்பதாக நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்திருக்கும் அதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கையென்பது தவறுதலாக இடம்பெற்றதொரு விடயமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.