Sunday, December 31, 2006

கண்காணிப்பு பணிகளை இடைநிறுத்தியதற்கு இலங்கை...

கண்காணிப்பு பணிகளை இடைநிறுத்தியதற்கு இலங்கை அரசு விளக்கம் கோர முடிவு? போர்நிறுத்த கண்காணிப்பு குழு தற்போது நிலவும் யுத்த சூழலின் பின்னணியில் தனது கண்காணிப்புப் பணிகளை கடந்த 27ம் திகதி திருமலையில் இருந்தும் மறுநாள் ஏனையபகுதியில் இருந்தும் இடைநிறுத்தியமைக்கான காரணம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாக விளக்கம் கோருவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா தகவல் தொடர்புத் திணைக்களம், மாற்று ஏற்பாடுகள் எவற்றையும் மேற்கொள்ளாது, வடக்குக் கிழக்கில் இருந்து கண்காணிப்பாளர்கள் அனைவரையும் கண்காணிப்புக் குழு கொழும்பிற்கு மீளப் பெற்றிருப்பதாக, குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இல்லாததால், கடந்த சில நாட்களில் பல்வேறு போர்நிறுத்த மீறல்கள் சம்பவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வடக்குக் கிழக்கில் இருந்து கண்காணிப்பாளர்கள் அனைவரும் மீளப் பெறப்பட்டமை குறித்து, கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் லார்ஸ் ஜொஹான் சொல்வ்பேர்க் நாளை ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்றபின் கொழும்பு திரும்பும்போது அரசாங்க சமாதான செயலகம் விளக்கம் கோரும் என, சிறீலங்கா தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.