Sunday, December 31, 2006

சர்வதேச பயங்கரவாதி, மனநோயாளி புஷ் வெறிபிடித்து

சர்வதேச பயங்கரவாதி, மனநோயாளி புஷ் வெறிபிடித்து அலைகிறது அமெரிக்கா * மத, அரசியல், சமூகத் தலைவர்கள் கண்டனம் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையானது மனித தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித்தன செயற்பாடென கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. `எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்' என வர்ணிக்கப்பட்ட சதாம் ஹூசைனுக்கு, நேற்று சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஈராக்கிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இத்தண்டனை பற்றிய சமய, சமூக மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கு தரப்படுகிறது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு மனிதர் எவருக்கும் அதிகாரமில்லை. ஈராக்கிய ஜனாதிபதி தூக்கிலிடப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மனித தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித்தன செயற்பாடு இது. ஈராக்கில் நடைபெறும் கொலைகளை நிறுத்த இது ஒருபோதும் உதவப்போவதில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அநாகரீக செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்களின் உச்சக்கட்ட செயற்பாடே இதுவாகும். அமைச்சர் ஜெயராஜ் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு பைத்தியக்காரன் போன்று செயற்படுகிறார். உலக பொலிஸ்காரன் போன்று அமெரிக்கா செயற்படுவதை ஏற்க முடியாது. ஈராக்கை ஆக்கிரமித்து அதன் ஜனாதிபதியை தூக்கிலிட்ட அமெரிக்கா நாளை ஈரான் மற்றும் வட கொரியாவிலும் இவ்வாறு செயற்படும். சகல உலக நாடுகளும் அமெரிக்காவுக்கு அடிபணிய வேண்டுமென அவர்கள் கருதுகிறார்கள். இது அழிவுக்கே வழி வகுக்கும். உலக வரலாற்றில் இதுவோர் கறுப்புப் புள்ளி. புஷ்ஷுக்கும், சதாம் ஹூசைனுக்கு ஏற்பட்ட ஒரு நிலையே ஏற்படும். விஜே டயஸ்- சோசலிஷ சமத்துவக் கட்சி சர்வதிகார அமெரிக்கா முழு உலகையும் ஆட்டிப்படைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமே சதாம் ஹூசைன் மீதான தண்டனையாகும். ஈராக் மக்கள் புஷ்ஷின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் நிம்மதியாக இருந்தனர். புஷ்ஷின் ஆக்கிரமிப்பின் பின்னர் ஈராக்கில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது அமெரிக்காவே. ஈரான் - ஈராக் யுத்தத்தின்போது ஈராக்கிற்கு உதவியளித்த அமெரிக்கா, நடுநிலையுடன் கூட செயற்பட்டதில்லை. அமெரிக்காவின் அங்கீகாரத்துடன் நிறுவப்பட்ட ஏகாதிபத்திய நீதிமன்றம் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கியுள்ளது. இது அருவருக்கத்தக்கது என்றார். அமைச்சர் டி.எம். ஜயரட்ண நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதனை அமெரிக்கா கொன்று விட்டது. இதற்காக அவர்கள் அதிக விலையைச் செலுத்தப் போகிறார்கள். உலகப் பயங்கரவாதி புஷ், இஸ்லாமிய போராளிகளின் போராட்டத்திற்கு புதுவடிவம் வகுத்துக் கொடுத்துள்ளார். இதன்மூலம் உலகில் ஏற்படும் அத்தனை படுமோச செயல்களுக்கும் அராஜகவாதி புஷ் பதில் கூற வேண்டும். என்றாவது ஒருநாள் அமெரிக்காவின் அடாவடித்தனம் ஒழிந்தே தீரும். இதை எவராலும் தடுக்க முடியாது. டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து இதுவோர் நீதியற்ற செயல். இதன் மூலம் எதனை அமெரிக்காவும், அதன் தோழமை சக்திகளும் சாதித்து விட்டார்கள் என்பது பிரதான கேள்வியாகும். மனிதனாகப் பிறந்த எவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கும் அதிகாரமில்லை. இதில் உடன்பாடு காண முடியாது. அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் செயற்படுபவர்களுக்கு சதாம் மீதான தூக்குத் தண்டனையானது சாதகமாக அமையும் என்றார். சனந்த அல்விஸ்- விரிவுரையாளர் ஒன்றியம் இன்றைய உலகில் தூக்கிலிடப்படக் கூடியவர்கள் வரிசையில் முதலிடம் வகிப்பர்கள் புஷ்ஷும் ரொனி பிளயருமே. உலக வரலாற்று ஒழுங்கு எதிர்வரும் காலங்களில் மாற்றமடையப் போகிறது. இதனை சுமக்க வேண்டியது அமெரிக்காவும் பிரித்தானியாவுமே. வெறி பிடித்து அலையும் அமெரிக்கா ஆட்சியாளர்கள் குப்புற கவிழும் காலம் வெகு தொலைவில் இல்லை. சட்டத்தரணி இ. தம்பையா அமெரிக்காவின் உதவியுடன் அமைக்கப்பட்ட ஈராக்கிய அரசாங்கமும், அதன் நீதித்துறையும் ஒரு பொம்மையைப் போன்றதாகும். குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை ஈராக் மக்களே தீர்மானிக்க வேண்டும். சதாம் ஹூசைனை உற்பத்தி செய்தது அமெரிக்காவே. இப்படியாக தூக்குத் தண்டனை விதிக்கப்போனால், உலகிலுள்ள பல அரசியல் தலைவர்களை (புஷ் உள்ளிட்ட) தூக்கில் போட வேண்டும். இதனை ஏற்க முடியாது. இதைக் கண்டிக்கிறோம்.