Saturday, December 30, 2006

தூக்கிலிடப்பட்டார் சதாம் உசேன்!

தூக்கிலிடப்பட்டார் சதாம் உசேன்! Saturday, 30 December 2006 பாக்தாதில் உள்ள ரகசிய இடத்தில் சதாம் உசேன் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். தூக்கு மேடைக்கு சதாமை அழைத்துச் சென்றபோது அவர் எந்தவித எதிர்ப்பபும் காட்டாமல் அமைதியாகவும், நிதானமாகவும், திடமாகவும் நடந்து சென்றார். தூக்கு மேடையில் நின்றபோது ஒரு கையில் திருக்குரானை இறுகப் பிடித்தபடி தூக்குக் கயிற்றுக்கு தனது தலையை அவர் காட்டினார் என இராக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார். மேலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்க அதிகாரிகள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்றும் தெரிகிறது. 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கில் நுழைந்த சில நாட்களில் சதாம் உசேன் தலைமறைவானார். அதே ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அவர் சொந்த ஊரான திக்ரித் நகரில் வைத்து பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் சதாம் உசேன் உள்ளிட்டவர்கள் மீதான புகார்களை விசாரிக்க அமெரிக்க ஆதரவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் சதாம் உசேன் உள்ளிட்ட 3 பேருக்கு நவம்பர் 5ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பு பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சதாம் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. இதுதவிர இன்னொருவரின் ஆயுள் தண்டனையையும் தூக்குத் தண்டனையாக மாற்றியது. இதைத் தொடர்ந்து சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சதாமுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஈராக் அரசு எந்தக் கருத்தையும், முடிவையும் வெளியிடாமல் இருந்த நிலையில் அமெரிக்க தரப்பில் ஈராக் அரசுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற நிர்ப்பந்தம் எழுந்தது. அதுவரை தங்களது பொறுப்பில் இருந்து வந்த சதாமை, தண்டனையை நிறைவேற்றக் கூறி ஈராக் அரசு அதிகாரிகளிடம் அமெரிக்க படைகள் ஒப்படைத்தன. மேலும் சதாம் தூக்குத் தண்டனைக்கான ஏற்பாடுகளையும் அமெரிக்காவே செய்தது. இன்னும் 36 மணி நேரத்திற்குள் சதாம் தூக்கிலிடப்படுவார் என்று நேற்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி 8.30 மணி) சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டார். சதாம் தூக்கிலிடப்பட்டதை அமெரிக்க ஆதரவு ஈராக் தொலைக்காட்சியான அல் ஹுர்ரா டிவி முதலில் தெரிவித்தது. தூக்குத் தண்டனை முழுவதும் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளதாகவும், தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அவரது வழக்கறிஞர், மத குரு, டாக்டர் ஒருவர் உடன் இருந்ததாகவும் அந்த டிவி செய்தி தெரிவித்தது. தம்பியும், நீதிபதியும் தூக்கிலிடப்படவில்லை: இதற்கிடையே, சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரரான பர்ஸான் அல் திக்ரிதி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் இன்னும் தூக்கிலிடப்படவில்லை என்று ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முவாபக் அல் ருபையா மறுத்துள்ளார். முன்னதாக இவர்கள் தூக்கிலிடப்பட்டதாக செய்திகள் வந்தன. இது குறித்து முவாபக் கூறுகையில், சதாம் உசேன் மட்டும்தான் தூக்கிலிடப்பட்டுள்ளார். அல் திக்ரிதி, அல் பாந்தர் ஆகியோர் தூக்கிலிடப்படவில்லை. நான் சதாம் தூக்கிலிடப்பட்டதை பார்த்தேன். அப்போது அவர் உடைந்து போய்க் காணப்பட்டார் என்றார் ருபையா. அல் திக்ரிதியையும், அல் பாந்தரையும் பக்ரீத் முடிந்த பிறகு தூக்கிலிட ஈராக் அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று கூறுகிறது. ஆனால் நாளை அவர்கள் தூக்கிலிடப்படக் கூடும் என்று இன்னொரு செய்தி கூறுகிறது. சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தி மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. அதுதொடர்பான படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஈராக் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சதாம் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது. கராச்சி உள்ளிட்ட இடங்களில் சதாமுக்கு ஆதரவாக பலரும் சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்தினர். சதாம் புகைப்படங்களை ஏந்தியபடி, அமெரிக்க கொடிகளை எரித்து தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்தியாவிலும் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லீம்கள் ஒன்று கூடி அமெரிக்காவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். ஏமனில் உடல் அடக்கம் சதாமின் கடைசி விருப்பம்: இதற்கிடையே தனது உடலை ஏமன் நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என சதாம் உசேன் தனது மகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடைசி விருப்பமாக தெரிவித்துள்ளார். சதாமின் மகள் ரக்த் தற்போது ஜோர்டானில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார். அவர் கூறியதாக சதாம் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கையில், தனது உடலை தற்காலிகமாக ஏமனில் அடக்கம் செய்ய வேண்டும். ஈராக் விடுதலை பெற்றவுடன் சதாமின் உடலை ஈராக் கொண்டு சென்று மறு அடக்கம் செய்ய சதாம் விருப்பம் தெரிவித்துள்ளார். என சதாம் விருப்பம் தெரிவித்து ரக்துக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே சதாம் உடலை ஏமனில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என் ரக்த் விரும்புகிறார் என்று அவர்கள் தெரிவித்தனர். சதாம் தரப்பு வழக்கறிஞர் இஸ்ஸாம் ஜஸ்ஸாவி முன்னதாக கூறுகையில், சதாமின் மரணத்தை எதிர்கொள்ள அவரது மகள்கள் தயாராகி விட்டனர். அவர் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தி அடைய அவர்கள் இறைவனை இறைஞ்சிக் கொண்டுள்ளனர் என்றார். கொண்டாட்டமும் சோகமும்: சதாம் உசேன் தூக்கில் போடப்பட்ட செய்தி வெளியானதும் துஜைல் நகரில் உள்ளவர்கள் வீதிகளில் கூடி அதை வரவேற்றுக் கொண்டாடினர். அதேபோல ஷியா முஸ்லீம்களும் சதாம் தூக்கிலிடப்பட்டதை வரவேற்று கொண்டாடினர். அதேசமயம், சதாம் ஆதரவாளர்களும், அவரது சொந்த ஊரில் உள்ளவர்களும் சோகத்திலும், கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் பெரும் கலவரத்தில் இறங்கலாம் என்பதால் தலைநகர் பாக்தாத் உள்பட நாடு முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. tamiloosai.com