வடக்கு- கிழக்கை மீண்டும் இணைக்க இந்தியா முயன்றால் அதற்கெதிராக சிங்களவர்கள் ஆயுதமேந்திப் போராடுவர் * ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை இந்தியா, இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சித்தால் கடந்த காலங்களைப் போன்று பார்த்துக் கொண்டிராமல் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்களென ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை இனப் பிரச்சனையானது வடக்கு- கிழக்கு பிரிக்கப்படாமல் அரசியல் தீர்வொன்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடென சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பாக கேட்கப்பட்டபோதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரான சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; "இதை மன்மோகன் சிங் கூறினாலும் சரி, அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறினாலும் சரி வெளிநாட்டவர்கள் எவருக்கும் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடும் உரிமை கிடையாது. இலங்கையின் வடக்கு- கிழக்கை ஒன்றாக இணைக்க இந்தியா வலியுறுத்துமென்றால் அது காஷ்மீரையும் ஒன்றாக இணைத்துக் கொடுக்க முன்வர வேண்டும். இதற்கு முன்னர் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்த இந்தியா இறுதியில் வடக்கிலும், தெற்கிலும் பலர் கொல்லப்பட காரணமானதுடன் அவர்களது படையினர் பலரையும் இழந்தது. எனவே, இதை செய்ய முடியாதென நிரூபித்ததும் இந்தியா தான். இதேவேளை, வடக்குடனான இணைப்பிலிருந்து கிழக்கை பிரித்ததன் மூலம் கிழக்கிலிருந்து பதுளை வழியாக முன்னேறி மலையகத்தையும் கைப்பற்றி "மா ஈழம்" உருவாக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா சிறந்த கொள்கையை கடைப்பிடித்து வந்தது. எனினும், அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்பவே புலிகள் தோற்பதை விரும்பாத இந்தியா இவ்வாறான கருத்துகளை தெரிவிக்கிறது. கடந்த காலத்தில் இந்தியா வடக்கு- கிழக்கை பலவந்தமாக ஒன்றிணைத்து வைத்தது. ஆனால், இம்முறை சிங்கள மக்களை வெளிநாட்டு சக்திகளால் ஆட்ட முடியாது. அவ்வாறு மீண்டும் இரு மாகாணங்களையும் இணைக்க முயற்சித்தால் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்கள். இந்தியாவும், அமெரிக்காவும் உதவாவிட்டால் நாம் தனிமைப்பட்டு விடமாட்டோம். எமக்கு உதவ பலர் இருக்கின்றனர்" என்றார்.





