Sunday, December 24, 2006

நம்பிக்கை எமக்கு இல்லை: ஜோர்ஜ் பெர்னாண்டஸ்

இலங்கைப் பிரச்சினையில் மன்மோகன் சிங் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை: ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என்று இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை மெமோரியல் மண்டபத்தின் முன்பாக நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடார் பேரவை மாநில தலைவர் ஏ.நாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் கூறியதாவது: ஈழத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை வருத்தத்தை வரவழைக்கிறது. அங்கு ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு தமிழ் மக்கள் நாளாந்தம் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஈழத்தில் நிலவி வரும் பிரச்சினையில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் அவர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இருந்தாலும் காத்திருப்போம். சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது. மேலும் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவியும் மத்திய அரசு வழங்கக் கூடாது. ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு ஆறுதல் கூறும் வகையில் உதவிகளை செய்ய வேண்டும். பசி, பட்டினியில் இருந்து அந்த மக்களை காக்க வேண்டும். நான் பதவியில் இருந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்துள்ளேன். ஈழத் தமிழர்களுக்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உதவி செய்ய வேண்டும். கட்சி வேறுபாடுகள் இதில் இருக்கக் கூடாது என்றார் அவர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறிலலங்கா அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடார் பேரவை பொதுச் செயலாளர் சந்திரசேகரன், கெளரவ தலைவர் எஸ்.சி.பாண்டியன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் எம்.கண்ணன், ஆர்.கே.காளிதாஸ், மாநில துணை தலைவர் கரூர் சின்னத்துரை உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.