இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசினர்.
இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூடமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரமன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
சென்னையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சுப.வீரபாண்டியன் உரையாடுகிறார். அருகில் இரா.சம்பந்தனும் மாவை சேனாதிராசாவும்
இச்சந்திப்பு தொடர்பாக எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் அளித்த நேர்காணல்:
இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஈழத் தமிழர்களின் துயரங்களை விளக்கினோம்.
இச்சந்திப்பு 45 நிமிட நேரம் நடைபெற்றது.
நாங்கள் முன்வைத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நியாயமானவைதான் என்று இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார். மேலும் வடக்கு-கிழக்கு பிரிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் கெளரவத்தோடும் கண்ணியத்தோடும் பாதுகாப்பாகவும் வாழ வேன்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அண்மையில் இந்தியா வந்திருந்த சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சேவிடமும் இதனைத் வலியுறுத்தியிருக்கிறோம் என்றும் இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமருடனான எமது சந்திப்பானது ஒரு திருப்புமுனையாகும் என்றனர் அவர்கள்.
இச்சந்திப்பின் போது இந்திய பிரதமரின் முதன்மை ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார அமைச்சு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதினம்.com
Friday, December 22, 2006
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்...
Friday, December 22, 2006





