Wednesday, November 29, 2006

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே...

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே - ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வே என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கருத்தை ஐக்கிய தேசிய கட்சி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் சகல இன மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படும் வகையில், அரசியல் தீர்வு அமைய வேண்டும். பெரும்பான்மையான தமிழ் மக்களின், ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றையே எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும், வன்முறைகள் பரவி வருவதுடன், வட கிழக்கில் வாழும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில், வட கிழக்கு மக்கள் தமது வாக்கை பயன்படுத்துவதை தடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தடுக்கப்பட்டது. அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தால், 2002 2003 ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இணைத்தலைமை நாடுகள் கூறியுள்ளது போல் மனிதாபிமான விடயங்களை அரசியல்படுத்தாமல், அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்திற்காக சகல கடல் மற்றும் தரை வழிப்பாதைகளை திறக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது