விரைவில் தென்னிலங்கைக்கு தமிழ் இராச்சியத்திலிருந்து விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் * பாராளுமன்றத்தில் சிவநேசன் எம்.பி. திட்டமிட்ட இன அழிப்பை தமிழருக்கெதிராக மேற்கொண்டு வருவதாக அரசை குற்றம் சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவநேசன் மிக விரைவில் உதயமாகவுள்ள தமிழ் இராச்சியத்திலிருந்து தென்னிலங்கைக்கு விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுமெனவும் சூளுரைத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் இங்கு தெரிவித்ததாவது; வட, கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை முன்னொரு காலத்தில் பிரபல்யம்பெற்று விளங்கியது. ஆனால், அந்நிலைமை இன்று மாறிவிட்டது. வடக்கு, கிழக்கில் உள்ள வளங்களை தென்னிலங்கை அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. பட்டினிச் சாவினை குடாநாட்டு மக்களும், வாகரை மக்களும் எதிர்நோக்கியுள்ளனர். தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொண்டு வருகிறது. இன அழிப்பையும், நில அபகரிப்பினையும் மேற்கொள்ளும் அரசிடம் தமிழ் மக்கள் அபிவிருத்தியை எதிர்பார்க்கவில்லை. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடத்தில் கடற்படை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடல் அட்டைகளை பிடிப்பதற்கு தடை விதித்துள்ள படையினர் தாம் அக்கடல் அட்டைகளை பிடித்து வருகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இதனால், அம்மக்கள் உண்ண உணவின்றியும், கையில் பணமின்றியும் வாழவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 35 இலட்சம் பனைமரங்கள் உள்ளன. இப்பனை மரங்களை இராணுவம் அழித்து தமது காவல் அரண்களை அமைக்க பயன்படுத்துகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் தொழிலின்றி நடு வீதிக்கு இன்று வந்துள்ளனர். பனை அபிவிருத்தியின் செயற்பாடுகள் முடக்கப்பெற்றுள்ளன. இதனால் இச்சபையின் பயன்களை எவரும் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசுக்கு தமிழர் தாயக அபிவிருத்தியில் அக்கறையில்லை. மாறாக அழிப்பு நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கென தனியரசை நிறுவப்போவதாக அறிவித்துள்ளார். மிகவிரைவில் தமிழ் ஈழ இராச்சியத்திலிருந்து விவசாயப் பொருட்களை அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.





