மட்டக்களப்பு - வவுணதீவு பாதை மூடப்பட்டது மக்கள் நகருக்குள் வரமுடியாத அவலநிலை மட்டக்களப்பு - வவுணதீவு பாதை நேற்று திங்கட்கிழமை காலை திடீரென மூடப்பட்டதால் மட்டுநகருக்குள் வந்த மக்கள் போகமுடியாதவாறும் வவுணதீவுக்கு அப்பால் இருக்கும் மக்கள் நகருக்குள் வரமுடியாத நிலையும் தோன்றியுள்ளது. மாவீரர் தினம் நேற்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் இவ்வேளையிலேயே வவுணதீவு பாதை படையினரால் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வவுணதீவு பிரதேச செயலகம், பிரதேசசபை போன்ற அரச காரியாலயங்களும் இயங்கவில்லை. இவ்வீதியின் பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு செல்லும் மண்முனை, அம்பிளாந்துறை, பட்டிருப்பு ஆகிய பாதைகள் பலத்த சோதனையின் பின்னர் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுவதுடன் பாதை சேவையும் இடம்பெற்றது.





