Tuesday, October 31, 2006

நோர்வே இரு தரப்பினரிடமும் கோரிக்கை.

நிதானமாக முடிவுகளை எடுக்கும்படி நோர்வே இரு தரப்பினரிடமும் கோரிக்கை. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறி லங்கா அரசுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சின் பலாபலன்களையும், நிலைமைகளின் பிரதிபலிப்புகளையும் கொஞ்சக்காலம் காத்திருந்து அறிந்து கொள்வதற்கு முன்னர் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கோ அல்லது ஆத்திரப்பட்டு இலங்கை வாழ் மக்களின் அவலங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் செயல்களிலோ, நடவடிக்கைகளிலோ தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசும் ஈடுபடக்கூடாது என்று இரண்டுநாள் ஜெனிவாப் பேச்சைத் தொடர்ந்து நோர்வே அனுசரணையாளர்கள் விடுத்த அறிக்கையில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. சமாதான முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் நோர்வே கலந்து பேசியும், விவாதித்தும் வரும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி பிரஸெல்ஸில் நடந்த இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில், டோக்கியோ இணைத் தலைமை நாடுகள், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட முன்வருமாறு உற்சாகமூட்டியிருந்தன. இந்த அழைப்பை இருசாராரும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொண்டமை வரவேற்பிற்குரிய விடயமாகும். மனித அவலங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள், வன்முறைகளைக் குறைத்தல், அரசியல் தீர்வுக்கான அரசியல் பங்களிப்புகள் போன்ற மூன்று விஷயங்கள் சமாதான முன்னெடுப்பின்போது ஆராயப்படவேண்டிய தேவை ஏற்படும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினரால் இணக்கம் காணப்பட்டிருந்தது என்னும் முன்னுரையை தாங்கியுள்ள இந்த அறிக்கையில் மேலும் சொல்லப்படிருப்பதாவது: பேச்சின்போது அரசு, ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையியிலான அரசியல் முயற்சிகள் குறித்து எடுத்துக்கூறியது. இந்த முன் முயற்சியை சர்வதேச சமூகம் வரவேற்றிருக்கிறது. சர்வகட்சி மாநாடு குறித்தும் அரசு பேச்சின்போது பிரஸ்தாபித்துக்கொண்டது. அவசர மனிதாபிமான தேவைகள், நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையான பொதுமக்களின் அவலவாழ்வு குறித்து ஆராயவேண்டிய தேவை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது. ஏ 9 பாதையைத் திறக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கோரினார்கள். இதற்கு அரசு இணங்க மறுத்துவிட்டது. மனிதாபிமான நெருக்கடிகளை எவ்வாறு அணுகுவது, கையாளுவது என்பதுபற்றி இரு தரப்பாருக்கும் மத்தியில் எந்தவித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. புதிய சுற்றுப் பேச்சுக்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சமாதான முயற்சிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றிய சாத்தியமான யோசனைகள் குறித்து நோர்வே சம்பந்தப்பட்டோருடன் கலந்து பேசிவருகிறது. இரு தரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீதான தமது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர். இராணுவ நடவடிக்கைகளை வலிந்து ஆரம்பிக்கப்போவதில்லை என்றும் உறுதிதந்திருக்கிறார்கள். இரு தரப்பினரும், சமாதானத்தின் மீதான தமது பற்றுறுதியை நிறைவுசெய்யும் அதேவேளை, பொறுமையைப் பேணுதல் குறித்தும் சர்வதேச சமூகம் இவர்களிடமிருந்து எதிர்பார்த்து நிற்கிறது. பேச்சையடுத்து எழுந்துள்ள நிலைமைகளின் பிரதிபலிப்பைத் தெரிந்துகொள்வதற்கு சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் இரு தரப்பாரையும் கேட்டிருக்கிறோம். எனவே, அதற்கிடையில் அவசரப்பட்டு எந்தவித முடிவுக்கும் வரவோ அல்லது இலங்கை வாழ் பொது மக்களின் அவலங்களை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளிலோ, செயல்களிலோ ஈடுபடவேண்டாமென்றும் இரு தரப்பாரையும் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.