யாழ்.குடாநாட்டில் எரிபொருள் பற்றக்குறை காரணமாக போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் முடக்கநிலையை அடைந்துள்ளன. வடபிராந்திய போக்குவரத்து சபையின் 90 சதவீத பேருந்துகள் நேற்று சேவையில் ஈடுபடவில்லை. டீசல் விநியோகம் இடம்பெறாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை மற்றும் கோணடாவில் சாலைகளின் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை சாலையில் நேற்று வடபிராந்திய சாலையின் பேருந்துகள் சேவையை சீராக நடத்தவில்லை. இந்தநிலையில் நேற்று காரைநகர் சாலையின் பேருந்து சேவைகள் முடங்கியிருந்தன. யாழ்ப்பாணத்தில் வழமையாக மாணவர்களுக்காக அதிக பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்ற போதும் அவையும் நேற்று மட்டுப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் தமது வீடுகளுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





