யாழ் குடாநாட்டில் உணவுப் பொருளுக்கு பாரிய தட்டுப்பாடுகள் தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே அரசாங்கம் கூறுவது போன்ற பாரிய அளவில் உணவுப் பொருட்கள் எடுத்துவரப்படாததுடன் பொது மக்களுக்கான உணவுப் பொருள் விநியோகம் கூட சீரற்ற முறையில் காணப்படுகின்றது. இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க பணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த நிலமை மற்றும் மக்கள் அலைக்கழிக்கப்படுவது சம்பந்தமாக சுட்டிக்காட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்கள். இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையும் ஈ,பி.டி.பி யினர் இத்தகைய குற்றங்களை பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பணிப்பாளர்கள் செய்வதாக பாரிய ஊடகப்பிரச்சாரத்தை முன்னெடுப்பதுடன் அவர்களின் பணியளர்களுக்கும் பெரும் உயிர் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றார்கள். இவர்களுடைய இத்தகைய பிரச்சாரத்திற்கு சில அரச உயர் அதிகாரிகள் தமது நன்மைக்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக தெரிவிககப்படுகின்றது. இதனையிட்டு பொது மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளார்கள். குறிப்பாக பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக பொருட்கள் விநியோகம் இடம் பெறும் சங்கக் கடைகள் மற்றும் இராணுவத்தினர் பொருள் விநியோகம் செய்யும் இடங்களிலும் காத்துக்கிடப்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.





