ஜெனீவா பேச்சுக்குச் செல்லும் இலங்கை அரசாங்க குழுவும் விடுதலைப் புலிகளும் கடந்த முறை ஜெனீவாவில் இரு தரப்பும் ஒரேயிடத்திலேயே தங்கியிருந்தனர். எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்முறை இரு தரப்பும் வௌ;வேறு ஹோட்டல்களில் தங்கவுள்ளதாக தெரியவருகின்றது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுகள் 28 ஆம், 29 ஆம் திகதிகளில் ஜெனீவா மாநாட்டு நிலையத்திலேயே நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டு நிலையத்திற்கு இரு தரப்பும் விசேட பஸ்களில் அழைத்துச் செல்லப்படவுள்ளன. இந்தப் பேச்சுகளில், கடந்த முறை ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட அரசாங்கத் தூதுக் குழு முழுமையாகக் கலந்து கொள்ளுமெனவும் அதில் மாற்றமிராதெனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புலிகளின் குழுவில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கலந்து கொள்ளமாட்டாரெனத் தெரிய வருகிறது. இவருக்குப் பதிலாக சட்ட ஆலோசகர் வி. உருத்திரகுமாரன் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுகளுக்கு நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமை தாங்குவார்.





