கடல் வழி விநியோகம் மூலம் குடா நாட்டில் இயல்பு நிலையை உருவாக்குவது பற்றி ஆராய்வு. யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை மூடி வைத்துக் கொண்டு கடல் வழி விநியோகங்கள் மூலம் குடா நாட்டில் இயல்பு நிலையை உருவாக்குவது குறித்து நேற்று புதன்கிழமை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தலைமையில் முக்கிய மாநாடொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த, பல முக்கிய அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் வலி. வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் நடத்திய உயர் மட்ட மாநாட்டில் பல முக்கிய விடயங்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த மாநாடு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது. இதில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன, கல்வி அமைச்சின் செயலாளர் ஆரிய ரட்ன ஹேவஹே, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் காந்த லியனஹே மற்றும் போக்குவரத்து அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு, தபால் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதேநேரம் யாழ். குடாநாட்டிலிருந்து யாழ். அரச அதிபர் கே.கணேஷ், அரச திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், பெற்றோலிய கூட்டுத் தாபனம், வடபிராந்திய போக்குவரத்துச் சபை, வட பிராந்திய தபால் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். ஆஸ்பத்திரி பணிப்பாளர் உட்பட பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த மாநாடு வலி.வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் ஓரிடத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், குடாநாட்டுக்கான உணவுப் பொருள் விநியோகம் மற்றும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வட பிராந்திய போக்குவரத்துச் சபை குடாநாட்டில் வழமையான போக்குவரத்துச் சேவையை மேற்கொள்ள முடியாத நிலைமை மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள், குடாநாட்டு பாடசாலைகளை மீண்டும் இயங்கச் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், யாழ். ஆஸ்பத்திரிக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் யாழ். ஆஸ்பத்திரிக்கான அத்தியாவசியப் பொருட்களின் தேவைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த மாநாடு மாலை 4 மணியளவிலேயே முடிவடைந்தது. யாழ். குடாநாட்டில் தற்போது சிவில் நிர்வாகம் பெரிதும் முடங்கியிருக்கும் நிலையில், யாழ். குடாநாட்டுக்கான தரை வழிப் பாதையை திறக்காமலும் சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் மீண்டும் ஏற்படுத்துவது குறித்தே இங்கு ஆராயப்பட்டது. எப்படியாவது குடாநாட்டில் இயல்பு நிலையை உருவாக்க வேண்டுமென்பதே கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளின் நிலைப்பாடாக இருந்த போதும் ஹஏ9' வீதியைத் திறக்காது குடாநாட்டில் இயல்பு நிலை உருவாக்கப்படுவது சாத்தியமற்றதென குடாநாட்டு அதிகாரிகள் இங்கு தெளிவாகத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.





