Saturday, September 30, 2006

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலிருந்து எதிர்வரும் வாரம் சிறிலங்கா நீக்கம்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்காவை நீக்குவது தொடர்பான முயற்சிகள் தீவிரமான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாட்டில் மிக அதிகமான விமர்சனங்களுக்குள்ளான ஒரே நாடு சிறிலங்கா. எதிர்வரும் வாரம் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறிலங்கா நீடிப்பது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட உள்ளதால் அதனைத் தடுக்கும் இராஜதந்திர செயற்பாடுகளில் சிறிலங்கா கவனம் செலுத்தி வருகிறது.வடக்கு - கிழக்கில் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெறும் அதே நேரத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல்வேறு நாடுகள் தொடர்பிலான கருத்தரங்கக் கூட்டங்களும் இணையாக நடத்தப்பட்டு வருகின்றன.ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான இண்டெர்பெய்த் இண்டர்நேசனல் சார்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பிலான கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சார்லெஸ் கிரேவ்ஸ் தலைமை வகித்தார். அன்வதார் சிங் செகோன், டெர்ட்ரி மக்கொன்னெல் (பிரான்ஸ் தமிழர் உரிமை மைய சர்வதேச திட்ட இயக்குநர்) மற்றும் முகுல் ஹசாரிகா ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் உரையாற்றிய டெர்ட்ரி மக்கொன்னெல், சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலை கொள்கை தொடர்பாகவும் அண்மைய வன்முறைகள் மற்றும் சிறிலங்கா நீதிமன்றங்களினூடாக மறுக்கப்படும் நீதி ஆகியவை குறித்தும் விவரித்தார்.இக்கூட்டத்தில் வழமைபோல் சிறிலங்கா தரப்பினர் சிறிலங்கா அரசாங்கத்தின் இரத்தம் தோய்ந்த படுகொலைத் திட்டங்களை நியாப்படுஹ்த முனைந்தமை குறிப்பிடத்தக்கது.முன்னதாக ஆயுதப் போராட்டத்தால் சிறார் பாதிக்கப்படுதல் தொடர்பிலான ஆலோசனைக் கூடம் நடைபெற்றது. இதில் சர்வதேச கல்வி அபிவிருத்தி மையம் என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமானது இலங்கை நிலைமைகளை முன்வைத்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சிறிலங்காவுக்கான தூதுவர் சரளா பெர்னாண்டோ, ஐக்கிய நாடுகளின் விதிகளை எதிர்த்தும் பிரச்சனையை முன்வைத்த அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் தமிழ் மனித உரிமை ஆர்வலர்களை விமர்சித்தும் பேசினார். இதனிடையே சிறிலங்காவின் மனித உரிமை அவலங்கள் தொடர்பாக மாற்று கொள்கைகளுக்கான மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கை விவரம்:ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் இருவார காலமாக நடைபெற்று வரும் நிலையில் சிறிலங்காவின் நிலைமை மோசமடைந்து வருகிறது.அண்மைய வன்முறைகளால் வடக்கு கிழக்கில் மொத்தம் 2 இலட்சத்து 7 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ந்தும் இடம்பெயருகின்றனர். கடந்த செப்ரெம்பர் 26 ஆம் நாள் கிண்ணியாவில் இடம்பெயர்ந்து அகதிகளாக தங்கியிருந்த பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த சிறிலங்கா காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற் நிறுவனங்கள் செயற்படுவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் இந்த நிறுவனங்களுக்கு பாரிய முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு முழுமைக்கும் தொடர்ந்து கடத்தல்களும் படுகொலைகளும் நடைபெறுகின்றன. கொழும்பில் மட்டும் கடந்த சில மாதங்களில் 17 தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கிழக்கில் செப்ரெம்பர் 18 ஆம் நாள் பொத்துவிலில் 10 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து எழுந்த பதற்றமான நிலையினால் அங்கிருந்து சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்.சிறிலங்காவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை செயற்பட இயலாமையினால் பெருந்தொகையான படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகள் முடங்கியுள்ளன. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை ஆணையங்களில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி இதுவரை அளிக்கப்பட்டதுமில்லை. சர்வதேச சட்டவிதிகளை மீறும் வகையில் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் கடந்த செப்ரெம்பர் 15 ஆம் நாள் அளித்த தீர்பானது நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் சர்வதேச சுயாதீனமான மனித உரிமை ஆணைக் குழுவின் தேவையானது சிறிலங்காவுக்கு அவசியம்என்று வலியுறுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.