Friday, September 29, 2006

கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பெண் கைது. கொழும்பிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் விசேட பொலிஸ் குழுவொன்றினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து அண்மையில் கப்பல் மூலம் கொழும்பு வந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இவர் அங்கு சிகிச்சைக்காக வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். இதனை அவதானித்த ஆஸ்பத்திரியைச் சேர்ந்த சிலர் இப் பெண் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து ஆஸ்பத்திரிக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்ததுடன் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் இவர் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இப் பெண்ணின் பெயர் உட்பட அவர் பற்றிய விபரங்களை வெளியிட அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.