Tuesday, September 26, 2006

ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் பாரியளவில் அதிகரிப்பு - ஆசிய மனித உரிமைகள் ஆணையகம். அடையாளம் தெரியாதவர்களினால் வெள்ளை வானில் வருகை தந்து ஆட்களை கடத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பசில் பர்ணாண்டோ எமது செய்திச் சேவைக்கு மேலதிக விபரம் தெரிவிக்கையில், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் வட கிழக்கில் மட்டுமல்லாமல், தென்பகுதியிலும் நடைபெறுவதாக கூறினார். இப்படியான சட்டவிரோதமான நடவடிக்கைகள் சட்டம் ஓழுங்கு மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்குவதுடன், நாட்டின் ஸ்திரத் தன்மையை பெரிதும் பாதிக்கும் விடயம் எனவும் தெரிவித்தார். தென்பகுதியில் 1987 ம் ஆண்டு காலப்பகுதியில், இடம்பெற்ற சம்பவங்கள் தற்சமயம், வட கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறுகின்றது. அதேபோல, அந்த காலப் பகுதியினில் தென் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள், தற்சமயம், வட கிழக்கு பகுதிகளிலும் இடம்பெறுகின்றது. இப்படியான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், நாட்டின், ஸ்திரத் தன்மையும், மனித வர்க்கத்தின் நாகரீகமும் பாழ்பட்டு போகும் எனவும், ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.