நான் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே சந்திரிகா சோமவன்ச மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சோமவன்சவின் கூற்றுக்கு அமைச்சர் அநுரா கடும் கண்டனம் எனது கோரிக்கையின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மீது எந்தவிதமான சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தார். ஏனெனில் அப்போது நாங்கள் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்-தாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுர பண்டாரநாயக்ர தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் தொடர்பாக அண்மையில் ஜே.வி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க விமர்சித்திருந்தமை குறித்து பதிலளித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜே.வி.பியின் தலைவரான சோமவன்ச அமரசிங்க சுந்திரக்கட்சிபற்றி விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இது வெட்கத்தனமான விடயமுமாகும். சுதந்தரக் கட்சியை விமர்சிக்க அவருக்கு எந்தவித அருகதையும் இல்லை. ஜே.வி.பி.யினர் கூறுவதுபோன்று சுதந்திரக்கட்சியினால் செயற்பட முடியாது. எமது கட்சிக்கென்று தனித்துவமான கொள்கையுண்டு. சோமவன்ச அமரசிங்க இவ்வாறு கூறியதற்காக நான் கவலையடைகிறேன். ஒரு கட்சியின் தலைவர் இன்னுமொரு கட்சி தொடர்பாக விமர்சிப்பது ஆரோக்கியமான விடயமல்ல. ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியின் ஸ்தாபகரின் மகனான என்னால் இதனை அனுமதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் இவ்வறான கருத்துக்களை வெளியிட வேண்டாமென சோமவன்ச அமரசிங்கவைக் கேட்டுக்கொள்கிறேன். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஜே.வி.பி. தனியாக போட்டியிட்டு ஒரு பிரதேச சபையை மட்டுமே வெற்றி கொண்டது. ஆனால் எமது சுதந்திரக்கட்சி 200க்கும் மேற்பட்ட சபைகளைக் கைப்பற்றியது. இந்த அரசியல் பின்னணியில் சோமவன்ச அமரசிங்கவை எவ்வாறு சுதந்திரக்கட்சியை விமர்சிக்கலாம்?இளம் அரசியல் வாதி ஒருவர் இவ்வாறு விமர்சனங்களை முன்வைத்தால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் சோமவன்ச போன்ற வயது முதிர்ந்தவர் இவ்வாறு கட்சியொன்றை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். சுதந்திரக்கட்சி மூன்று ஜனாதிபதி தேர்தலில்களிலும் பல பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்ற கட்சியாகும்.அன்று எனது கோரிக்கையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சோமவன்ச அமரசிங்க மீது எந்தவிதமான சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தார். ஏனெனில் அப்போது நாங்கள் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தாம்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தால் சோமவன்ச அமரசிங்க வெளிநாடு செல்வதற்கு பல விமானங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.





