மீன்பிடித்தடை காரணமாக 22ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மீன்பிடித்தடை காரணமாக 22ஆயிரம் குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண கூட்டுறவுச் சங்கம் கவலைதெரிவித்துள்ளது. மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட 18ஆயிரம் குடும்பத்தினரும் அவர்களைச் சார்ந்த மீன்பிடியுடன் தொடர்புடைய பிறதொழில்களைச் செய்துவந்த 4ஆயிரம் குடும்பத்தினரும் எவ்வித வேலைவாய்ப்போ வருமானமோ இன்றி தவிப்பதாக வடமாகாண கடற்றெழிலாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் சி.தவரத்தினம் தெரிவித்தார். அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை புனரமைப்புப் பணிகளிலோ அபிவிருத்திப் பணிகளிலோ ஈடுபடும் வாய்ப்பை அளிக்குமாறு அரசசார்பற்ற நிறுவனங்களை வேண்டிக்கொண்டபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையென்றும் அவர் கவலைதெரிவித்தார். துற்போது குருநகர் பகுதியில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் இரண்டுமணித்தியால நேரம் மீன்பிடிக்க அனுமதியளிக்கப்பட்டபோதும் சகல மீனவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தமுடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இவர்களுக்கான வேலைவாய்பை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் மேலும்தெரிவித்தார். இதேவேளை நேற்று குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடற்படையினரால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட மீனவர்களே இவ்வாறு மிக மோசமாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.





