படையினரின் தாக்குதல்கள் காரணமாகவே போக்குவரத்துகள் சீர்குலைவு – புலித்தேவன், விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கிலான இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையால் யாழிலிருந்து பொதுமக்கள் திருகோணமலைக்கு வரும் முயற்சிகள் சீர்குலைந்துள்ளதாக விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் குற்றம்சாட்டியுள்ளார் இது குறித்து அவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு கூறியுள்ளதாவது: இராணுவத்தினர் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். எமது முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேற முயற்சித்தனர். யாழிலிருந்து திருகோணமலைக்கு தமிழ் மக்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால் அதை சீர்குலைக்கும் வகையில் இந்நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. தற்போது திருகோணமலை துறைமுகம் மீது நாங்கள் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்துவதால் அது பாதுகாப்பானதாக இல்லை. இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நீடிக்கும் வரையில் மக்களை அழைத்துவர இயலாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் புலித்தேவன்.





